இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க எம்.பியுமான பிரிஜ் பூஷண் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறியதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
எனவே அவரை பதவி நீக்கக் கோரியும், உடனே கைது செய்யக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் சமீபத்தில் தன் ஆதரவை தெரிவித்தார். மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை ஒடுக்க டெல்லி காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்காதது பற்றி விளக்கம் அளிக்க டெல்லி காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
அதில் ‘மல்யுத்த வீரர் கூட்டமைப்பு தலைவர் மீது நடவடிக்கை எடுக்காது ஏன்?’ என மகளிர் ஆணையம் கேள்வியெழுப்பியது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மே 12ம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் டெல்லி காவல் துறை விளக்கம் தர வேண்டும் என, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.