கேரள மாநிலம் - கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட குற்றவாளி, சிகிச்சையளித்த பெண் மருத்துவரை 6 முறை கத்திரியால் குத்தியதில் மருத்துவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் கொட்டாரக்கரை போலீசார் சந்தீப் என்ற குற்றவாளி அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இந்நிலையில் பெண் மருத்துவரான வந்தனா அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.
சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் போது திடீரென ஆவேசமான குற்றவாளி சந்தீப் கத்திரியால் அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனாவை ஆறு முறை குத்தியுள்ளார். இதனால் அலறிய பெண் மருத்துவரின் அலறல் சத்தம் கேட்டு மருத்துவமனை பணியாளர்களும், போலீசாரும் காப்பாற்ற முயன்றுள்ளனர். அவர்களில் ஐந்து பேரையும் குற்றவாளி கத்திரியால் குத்தியுள்ளார்.
இதை அடுத்து குற்றவாளியை போலீசார் மடக்கி பிடித்தனர். காயம்பட்டு கிடந்த மருத்துவர் வந்தனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெண் மருத்துவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் மேலும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவசர சட்டம் நிறைவேற்றுமாறு முதல்வர் பினரயி விஜயனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.