2023-ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான ஜி.எஸ்.டி வருவாய் புது உச்சம் தொட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1.87 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட இந்த ஆண்டு 12% அதிகமாகும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ. 1,87,035 கோடியாகும்.
இதில் சி.ஜி.எஸ்.டி ரூ. 38,440 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 47,412 கோடி, ஐ.ஜி.எஸ்.டி ரூ. 89,158 கோடி. குறிப்பாக, செஸ் ரூ. 34,972 கோடி வசூலாகியுள்ளது' என தெரிவித்துள்ளது.
அதேபோல், 'ஐ.ஜி.எஸ்.டி-யில் இருந்து சி.ஜி.எஸ்.டி-க்கு ரூ.45,864 கோடியும், எஸ்.ஜி.எஸ்.டி-க்கு ரூ. 37,959 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2023-ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சி.ஜி.எஸ்.டி-க்கு ரூ.84,304 கோடியாகும். எஸ்.ஜி.எஸ்.டி-க்கு ரூ.85,371 கோடியாகும். இது 2023 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாயை விட 12% அதிகமாகும்.
முதல் முறையாக மொத்த ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2023 ஏப்ரல் 20ம் தேதி அன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரி வசூல் செய்யப்பட்டது. அன்றைய தினம் 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 68,228 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் 9.6 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 57,846 கோடி கிடைத்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஜி.எஸ்.டி. ரூ.11,559 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 19 சதவீதம் அதிகமாகும். புதுச்சேரியில், ரூ.218 கோடி வசூலாகி இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட 6 சதவீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.