ஆந்திராவில் 2000 ரூபாய் நோட்டுகளாகக் கொடுத்தால் கூடுதல் பணம் தருவதாக நூதன மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திராவில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தியதில் இருந்து எந்த ஏ.டி.எம் மையத்திற்குச் சென்றாலும் 2000 ரூபாய் நோட்டுகளாக மட்டுமே வரும். ஆனால், தற்போது அந்த நிலைமை அங்கு இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளது. தற்போது, அதை பார்ப்பதற்கே அபூர்வமாக உள்ளது.
இந்நிலையில், இதனை ஒரு கருவியாக வைத்து மோசடி கும்பல் பணத்தைப் பறித்து ஏமாற்றி வருகின்றனர். கர்நாடகா மாநிலத்தில், முன்பாகல் பகுதியைச் சேர்ந்த சிவண்ணா என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு, ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். பின்னர், குறுக்குவழியில் சம்பாதிக்க வேண்டும் என்று பெங்களூருவைச் சேர்ந்த டேனியல் , முன்பாகல் ஜமீர் பாஷா , கோலார் இம்ரான் , வெங்கடேஷைய்யா ஆகியோரை சேர்த்து ஒரு குழுவாக உருவாக்கினார்.
இதனையடுத்து ஆந்திராவில், வி.கோட்டா பெட்ரோல் பங்க் பகுதியில் உள்ள ரியாஸ்கான் என்பவரை சிவண்ணா சந்தித்தார். அவரிடம், தனக்கு சாமி என்பவரைத் தெரியும். அவரிடம் 1 லட்சம் ரூபாயை 2000 நோட்டுகளாகக் கொடுத்தால் கூடுதலாக 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பார் எனவும் கூறி ஏமாற்றியுள்ளார்.
பின்னர், ரியாஸ்கான் 80 லட்சம் ரூபாயை 2000 நோட்டுகளாகக் கொடுக்க வி.கோட்டா பெட்ரோல் பங்க்கிற்கு வந்துள்ளார். அங்கு சிவண்ணாவும் வந்துள்ளார். இவர்கள் இருவரும் பணத்தை மாற்ற நினைத்த போது விசில் அடித்தபடி டேனியல் வந்துள்ளார். தன்னை டி.எஸ்.பி என்று கூறி டேனியலிடம் இருந்து பணத்தைப் பறித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து, ரியாஸ்கான், பலமனேர் காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்த போது பணத்தை ஏமாற்றிப் பறித்துச் சென்றவர்கள் போலி போலீஸ்காரர்கள் எனத் தெரியவந்துள்ளது. பின்னர் ரியாஸ்கான், காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து டி.எஸ்.பி உடையில் வந்த டேனியல், சிவண்ணா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்தனர்.