பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான இவருக்கு வயது 95 ஆகும். சமீபத்தில் இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரகாஷ் சிங் பாதல் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். பிரகாஷ் சிங் பாதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை குறித்து அவரது மகனான சுக்பிர் சிங் பாதலிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி மூலம் விசாரித்து அறிந்தார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமித் ஷா, ‘பிரகாஷ் சிங் பாதலின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பது குறித்தும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்தும் தகவல் அறிந்து கவலை அடைந்தேன். அவரது உடல் நிலை குறித்து சுக்பிர் சிங் பாதலிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்து இருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பிரகாஷ் சிங் பாதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக பஞ்சாப் மாநில அரசியலில் கிங்காகவும், கிங்மேக்கராகவும் இருந்த பிரகாஷ் சிங் பாதலின் மறைவு பஞ்சாப் மாநில மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.