வாட்ஸ் அப் வீடியோ மூலம் வாக்காளர்களின் அனுதாபத்தை பெறும் வகையில் தி.மு.க. வேட்பாளர் விதிமுறைகளுக்கு எதிராக பரப்புரை செய்தார் என புகார்
புதுச்சேரியைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. நாகத் தியாகராஜனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டுப் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், நிரவி - டி.ஆர்.பட்டிணம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட என். நாகத் தியாகராஜன் 5,511 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தோல்வியடைந்த பா.ஜ.க. வேட்பாளர் மனோகரன், 'தி.மு.க. எம்.எல்.ஏ. நாக தியாகராஜனின் வெற்றி செல்லாது' என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்னர், தேர்தல் பிரச்சாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் தி.மு.க. வேட்பாளராக இருந்த என். நாக தியாகராஜன், செல் போனில், வாட்ஸ் அப் வீடியோ மூலம் வாக்காளர்களின் அனுதாபத்தைப் பெறும் வகையில் பரப்புரை செய்தார். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது' எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், 'மொபைலில் பிரச்சாரம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை' என்றும், 'தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரியும் தி.மு.க. எம்.எல்.ஏ. நாக தியாகராஜன் பதில் மனுத்தாக்கல்' செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், 'வாட்ஸ் ஆப் மூலம் பிரச்சாரம் செய்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளை மீறிய செயலா? இல்லையா? என்பது குறித்து வழக்கு விசாரணைக்குப் பிறகே தீர்மானிக்க முடியும்' என்றார். இதனால், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி விண்ணப்பித்த தி.மு.க. எம்.எல்.ஏ. நாக தியாகராஜன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.