வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடந்தது என்று குற்றம் சாட்டப்பட்டு சோதனை நடைபெற்றது
இந்தியாவில் முதலீடு செய்ய முறையாக அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், சர்வதேச செய்தி நிறுவனமான பி.பி.சி. நிறுவனம் மீது, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சர்வதேச செய்தி நிறுவனமான பி.பி.சி. நிறுவனம் ஆங்கிலம், இந்தி மற்றும் பல்வேறு இந்திய பிராந்திய மொழிகளில் செய்திகளை வெளியிட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் குறித்த ஆவணப்படத்தை 2 பாகங்களாக பி.பி.சி. நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.
இதனால், இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடைவிதித்தது. மேலும், இந்த ஆவணப்படம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், பி.பி.சி. நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் பிப்ரவரி 16 ம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 133ஏ விதிகளை பி.பி.சி. நிறுவனம் மீறி உள்ளதாகவும், அதன்பேரிலேயே, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பி.பி.சி. நிறுவனத்தின் விளம்பர வருவாயில் முரண்பாடுகள் உள்ளது. வருவாய்க்கு ஏற்ப அந்த நிறுவனம் வரிசெலுத்தவில்லை. அந்த நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு உள்ளது என்றும் வருமானவரித்துறை விளக்கம் அளித்தது.
மேலும், வெளிநாடுகளைச் சேர்ந்த தற்காலிக ஊழியர்களுக்கு பி.பி.சி. நிறுவனம் ஊதியம் வழங்கியதற்கு முறையான வரி செலுத்தவில்லை என்றும், வருமானவரித்துறை ஆய்வின்போது பி.பி.சி. நிறுவனம் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் வருமானவரித்துறை குற்றம் சாட்டி இருந்தது. வருமான வரித்துறையினரின் சோதனைக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், பி.பி.சி. நிறுவனத்தில் வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடந்தது என்று குற்றம் சாட்டப்பட்டு சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் பி.பி.சி. செய்தி நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.