பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடந்த வாரம் அறிவுறுத்தியது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாடு அரசு கடந்த வாரம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
மேலும் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் கொரோனாவால் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்தனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வழிகாட்டு நடைமுறைகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25000 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25,587 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,82,538 ஆக உள்ளது. கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், திரையரங்கம், பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பொதுஇடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.