40 நாட்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் - சுகாதாரத்துறை எச்சரிக்கை

40 நாட்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் - சுகாதாரத்துறை எச்சரிக்கை
40 நாட்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் - சுகாதாரத்துறை எச்சரிக்கை

BF.7 திரிபு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை கடந்த 24 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டில் அடுத்த 40 நாட்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் BF.7 திரிபு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை கடந்த 24 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 6000- க்கும் அதிகமான சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் 39 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு மரபணு பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.  

சர்வதேச பணிகளுக்கான கொரோனா சோதனை, மாஸ்க் பயன்பாடு மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா நடத்தை விதிகள் முழுமையாக பின்பற்றப் படுகிறதா ? விமான நிலைய டெர்மினல்களில் போதிய அடிப்படை மருத்துவ கட்டமைப்புகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

 BF7 கொரோனா பாதிப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றாலும், அடுத்த 40 நாட்களில் இதன் பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 

இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய தடுப்பூசி நிபுணர்கள் குழு இணைந்து BF7 திரிபு கொரோனா பாதிப்பிற்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளின் செயல்பாடுகளை மேப்பிங் முறையில் ஆய்வு செய்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட்கோவாக்சின் மற்றும் பயன்பாட்டிற்கு வர உள்ள incovacc உள்ளிட்ட தடுப்பூசிகள் BF.7 பாதிப்பை முழுமையாக எதிர்கொள்ளும் திறன் படைத்துள்ளதா, இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிக்கு அவசியம் ஏற்படுமா எனவும் மத்திய நோய்த் தடுப்பு மற்றும் தடுப்பூசி நிபுணர்கள் குழு ஆலோசித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com