ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும் - துணை குடியரசுத் தலைவர் அறிவுரை
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற கற்றுக் கொள்ள வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் அறிவுரை கூறியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு அமைச்சகங்களில் உதவி செயலாளர்களாக 2020 - ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரை அவரது இல்லத்திற்கு இன்று நேரில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பில் அதிகாரிகள் மற்றும் பயிற்சி துறைக்கான செயலாளர் ராதா சவுகான் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் துணை குடியரசுத் தலைவர் கலந்துரையாடினார். அதிகாரிகளுடனான சந்திப்பில் அவர் பேசும்போது, நீங்கள் அரசியல் சாசனத்தின் உயரிய விசுவாசத்திற்கு உட்பட்டு பணியாற்ற கூடிய நிலையில் கடன்பட்டுள்ளீர்கள்.
நீங்கள் எப்போதும் அதனை பாதுகாக்க, கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தின்கீழ் உத்தரவாதம் பெற்றுள்ள உரிமைகளையும் நீங்கள் நிலைநிறுத்த வேண்டும்.
ஒருவரின் கவனம் தன்மீது திரும்பும்படி ஈர்க்க செய்வதோ அல்லது அரசியல் பதவிகளை எடுத்து கொள்வதோ எல்லா நிலைகளிலும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடனுடனும், எந்த சூழலிலும் தங்களது பெயர் வெளியில் தெரியாத வகையில் பணியாற்ற அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் துணை குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்கியுள்ளார்.