தினசரி கொரோனா பாதிப்புகளில் 80% நாடு முழுவதும் உள்ள 90 மாவட்டங்களில் பதிவாகிறது
தினசரி கொரோனா பாதிப்புகளில் 80% நாடு முழுவதும் உள்ள 90 மாவட்டங்களில் பதிவாகிறது என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லாவ் அகர்வால், "தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. நாடு முழுவதும் பதிவாகும் தினசரி கொரோனா பாதிப்புகளில் 50% பாதிப்பு கேரளா, மகாராஷ்டிராவில் பதிவாகிறது. பிரிட்டன், ரஷ்யா, வங்கதேசத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை கவனித்து வருகிறோம்.
இன்னும் ஒரு சில வாரங்களில் இந்தியா இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என மக்கள் நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த இரு நாட்களாக பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரிப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது. சிம்லா, மணாலி போன்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றவில்லை என்றால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டியிருக்கும்.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்கள், புதுச்சேரியில் 1 மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. கேரளா, மகாராஷ்டிராவிலும் தொற்று அதிகரித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் இருந்து இந்தியா இன்னும் மீளவில்லை" என்றார்.