தனிமையில் வசித்து வந்த பாட்டிக்கும், தாத்தாவுக்கும் இடையே மலர்ந்த காதல்
தனிமையில் வசித்து வந்த பாட்டிக்கும், தாத்தாவுக்கும் இடையே மலர்ந்த காதல் கல்யாணத்தில் முடிந்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த காக்கநாடு பகுதியை சேர்ந்தவர் 73 வயதான வர்கீஸ் என்பவர் வசித்து வந்தார். திருமணமான அவரது பிள்ளைகள் வெளியூரில் வசித்து வருகின்றனர். அவரது மனைவி இறந்து விட்டதால் வர்கீஸ் தனியாக வசித்து வந்துள்ளார்.
கடந்த வாரம் கொரோனா பரிசோதனை முகாமுக்கு வர்கீஸ் சென்றபோது, அங்கு அதே பகுதியை சேர்ந்த 68 வயதான அஸ்வதி என்ற பாட்டியை சந்தித்தார். அஸ்வதிக்கு திருமணமாகி அவரது கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார். அவரது ஒரே மகளும் திருமணமாகி மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டதால் இவர் தனித்து வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த இருவரும் கொரோனா மையத்தில் சந்தித்து பேசியுள்ளனர். தங்களை பற்றி ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளனர். இதனால் தனியாக வசித்து வந்த அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். வெளியூரில் வசிக்கும் அவர்களது பிள்ளைகளிடம் இதனை கூற அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
வர்கீஸ்-அஸ்வதி திருமணம் நேற்று முன்தினம் கொச்சியில் எளிமையாக நடந்துமுடிந்துள்ளது. இருவரின் மகன், மகள் மற்றும் பேரன், பேத்திகள் முன்னிலையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.