கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் குழந்தையை காரில் வைத்து பூட்டிய கொடூரம்.
கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் குழந்தையை காரில் வைத்து பூட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் படல்பூரில் அமைந்துள்ள சாப்ராலா கிராமத்தில் சுகன் ஷர்மா- நீது தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் புலந்த்ஷாரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
2019ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அப்போது இருந்தே இந்த தம்பதியர் சண்டையிட்டு வந்துள்ளனர். பூர்வீக சொத்தை விற்க கணவனிடம் வற்புறுத்தி வந்துள்ளார் மனைவி.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை புலந்த்ஷாஹர்-கிரேட்டர் நொய்டா நெடுஞ்சாலையில் தனது குழந்தையுடன் கணவனும், மனைவியும் சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது, சொத்து விஷயமாக மீண்டும் தகராறு வர, ஆத்திரத்தில் கணவன் அவரின் மனைவியை காரிலிருந்து இறக்கிவிட்டு, அந்த குழந்தையை காருக்குள் வைத்து பூட்டி விட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டார் .
பொதுமக்கள் சாலையில் கூடிய நிலையில், காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த போலீசார், குழந்தையை காரிலிருந்து மீட்டனர்.
இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.