மகளை காதலித்து திருமணம் செய்த காதலனின் குடும்பத்தினர் மீது தந்தை துப்பாக்கி சூடு.
மகளை காதலித்து திருமணம் செய்த காதலனின் குடும்பத்தினர் மீது அவரது தந்தை துப்பாக்கி சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் சோட்டா பல்லத்வால் கிராமத்தை சேர்ந்தவர் ஹர்மன் சிங். இவர் சுக்ஜீந்தர் சிங் என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சுக்ஜீந்தர் சிங், ஹர்மன் சிங்கை எச்சரித்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஹர்மன் சிங், சுக்ஜீந்தர் சிங்கின் மகளை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த சுக்ஜீந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் நேற்று காலை 6:30 மணியளவில் ஹர்மன் சிங்கின் வயலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு ஹர்மன் சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மீது சுக்ஜீந்தர் சிங் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஹர்மனின் தாத்தா மங்கல் சிங் (65), தந்தை சுக்விந்தர் சிங் (42), மாமா ஜஸ்பீர் சிங் (40) மற்றும் உறவினர் பாபன்தீப் சிங் (18) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். ஹர்மன் சிங் மற்றும் அவரது உறவினர் ஒருவரும் காயமடைந்தனர்.
கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான சுக்ஜிந்தர் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.