பீகாருக்கு 1,200 கி.மீ. சைக்கிளிலேயே அழைத்து சென்று பாராட்டுகளை பெற்ற ஜோதியின் தந்தை மாரடைப்பால் காலமானார்
கடந்த ஆண்டு ஊரடங்கின்போது பீகாருக்கு 1,200 கி.மீ. சைக்கிளிலேயே அழைத்து சென்று பாராட்டுகளை பெற்ற ஜோதியின் தந்தை மாரடைப்பால் காலமானார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் பீகாரை சேர்ந்த ஜோதி குமாரி என்ற 15 வயது சிறுமியின் தந்தை அரியானாவின் குர்காவன் நகரில் சிக்கி கொண்டார். சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் அவதியுற்றார். இதனை அறிந்த ஜோதி, காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1,200 கி.மீ. தூரம் 10 நாட்கள் பயணித்து சொந்த மாநிலமான பீகாருக்கு அழைத்து சென்றார். இது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது.
ஜோதி குமாரி சைக்கிள் ஓட்டும் திறமை குறித்து அறிந்த தேசிய சைக்கிள் பந்தய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், லாக்டவுன் முடிந்தபின் அவரை டெல்லிக்கு பயிற்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஊரடங்கின்போது, காயமடைந்த தந்தையை பீகாருக்கு 1,200 கி.மீ. சைக்கிளிலேயே அழைத்து சென்று பாராட்டுகளை பெற்ற ஜோதியின் தந்தை மோகன் பஸ்வான் தர்பங்கா நகரில் நேற்று மாரடைப்பால் காலமானார். ரிக்ஷா ஓட்டுனரான மோகன் கடந்த ஆண்டு நடந்த விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்து உள்ளார். இதையடுத்து, அவர் வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.