மருத்துவமனைக்கு வந்த மூதாட்டிக்கு படுக்கை கிடைக்காத நிலையில் உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் படுக்கை பற்றாக்குறை காரணமாக ஏராளமான மருத்துவமனைகள் புதிதாக நோயாளிகளை அனுமதிக்க இயலாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் இருக்கக்கூடிய பிரபலமான ஒரு மருத்துவமனைக்கு உடல் நலக்குறைவு காரணமாக 62 வயதான மூதாட்டியை சிகிச்சைக்கு அனுமதிக்க அழைத்து வந்துள்ளனர். பல மருத்துவமனைகளில் அலைந்து திரிந்த பிறகு இறுதியாக இந்த மருத்துவமனைக்கு வந்ததால் உறவினர்கள் மிகுந்த மன விரக்தியில் இருந்துள்ளனர். இங்கும் மூதாட்டிக்கு அனுமதி கிடைக்காததால் அனுமதிப்பதற்கு முன்பாகவே அந்த மூதாட்டி இறந்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த அந்த மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையின் உள்ளே புகுந்து கண்ணாடி மற்றும் பொருட்களை சூறையாடினர். இதற்கு பதிலடியாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அங்கு பணி செய்பவர்கள் அனைவரும் சூறையாடலில் ஈடுபட்ட நபர்களை திருப்பி அடித்துள்ளனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.