’ஐயோ! நான் மாஸ்க் போட மாட்டேன், போட்டா மேக்-அப் கலஞ்சிடும்’ – அடம்பிடித்த மணப்பெண்ணுக்கு போலீஸ் வைத்த செக்!
பஞ்சாபைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர் தான் மாஸ்க் போட்டால் தன்னுடைய மேக்கப் கலைந்து விடும் என அடம்பிடித்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் கன்னா என்ற இடத்தில் நேற்று(ஏப்ரல் 22) ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. திருமணம் நடப்பதற்கு முன்பாக மணப்பெண்ணை பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேக்-அப் போட்டுக்கொண்ட மணப்பெண்ணை காரில் மண்டபத்துக்கு அழைத்து வந்தனர். சண்டிகர் மாநிலத்தில் கொரோனாவுக்காக அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது மணப்பெண் வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த அவரது சகோதரர், 2 குழந்தைகள் என அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். மணப்பெண் மட்டும் முககவசம் அணியவில்லை. நீங்கள் ஏன் முககவசம் அணியவில்லை என்று போலீசார் கேட்டனர்.
அதற்கு மணப்பெண் முக கவசம் அணிந்தால் மேக்-அப் கலைந்துவிடும். எனவே அணியமுடியாது என்று கூறினார்.
இதையடுத்து மாஸ்க் அணியாததால் ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினால் தான் இங்கிருந்து செல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர். இதனைச் சற்றும் எதிர்பாராத மணப்பெண் அபராதத்தைக் கட்டிய பின்னர் அங்கிருந்து திருமணம் நடக்கவிருந்த இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.