கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தவுடன், கேரள மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தவுடன், கேரள மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பாரத் பயோன்டெக், சீரம் இன்ஸ்ட்டியூட், பைஸர் ஆகிய நிறுவனங்களின் மருந்துகள் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மூன்று நிறுவனங்களுக்கும் விரைவாக ஒப்புதல் கிடைக்கலாம். 5 தடுப்பு மருந்துகள் பல்வேறு கிளினிக்கல் பரிசோதனையில் இருக்கின்றன.
ஏற்கனவே மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என தமிழகம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அறிவித்துள்ள நிலையில் கேரள மாநிலமும் தற்போது அறிவித்துள்ளது.
இந்நிலையில் கண்ணூரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று(டிச.13) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், கொரோனா தடுப்பூசி மாநில மக்களுக்கு இலவசமாக அரசு வழங்குமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தபின், கேரள மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். மக்களிடம் இருந்து எந்தக் கட்டணமும் அரசு வாங்காது, இலவசமாக தடுப்பூசி போடப்படும் இதுதான் எங்களின் நிலைப்பாடு. ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும் என்பது தெரியவில்லை. உண்மை என்னவென்றால் கொரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவது, பெரிய நிம்மதி அளிக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நடந்து வரும் நேரத்தில் இது நல்ல விஷயம், இரு கட்டத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்த தேர்தலுக்குப்பின் கொரோனா பாதிப்பு உயருமா என்பது இனிவரும் நாட்களில்தான் தெரியும்” என்றார்.
மேலும்,”ஒருவேளை கொரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயராமல் தற்போது இருக்கும் நிலை அதாவது குறைந்துவரும் நிலை தொடர்ந்தால், கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும்” என கேரள முதல்வர் தெரிவித்தார்.