லடாக் மோதல்... சீன வீரர்கள் பயன்படுத்திய பயங்கர ஆயுதங்கள்
லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய வீரர்கள் மீது சீன வீரர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்திய பயங்கர ஆயுதங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர் அஜய் சுக்லா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய வீரர்களுக்கு எதிராக சீன வீரர்கள் பயன்படுத்திய ஆயுதம் என தெரிவித்து கூர்மையான ஆணிகள் கொண்ட இரும்பு கம்பிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சண்டை நடந்த பகுதியில் இருந்து இந்திய படையினர் இந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும், சீன வீரர்களின் இந்த காட்டுமிராண்டித்தம் கண்டனத்துக்கு உரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீன வீரர்கள் இந்திய வீரர்களை தாக்க பயன்படுத்திய ஆயுதங்கள் என சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வரும் இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து தற்போதுவரை இரு நாட்டு ராணுவமும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.