பிஎம்சி வங்கி கடன் மோசடி! சேமிப்பு கணக்கு வைத்திருந்த பெண் மாரடைப்பால் உயிரிழப்பு!
மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ரூ.6,500 கோடி கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அண்மையில் செய்தி வெளியானது. இதன் தொடர்ச்சியாக, பிஎம்சி வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.1000 மேல் பணம் எடுக்க முடியாது என்றும், வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், பி.எம்.சி வங்கி ஊழலில் சிக்கித் தவித்து வருவதால், அந்த வங்கியில் ரூ.2.25 கோடி தனது மகள் பெயரில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த சோலாப்பூரைச் சேர்ந்த 73 வயதான பாரதி சதரங்கனி என்ற பெண், மாரடைப்பால் உயிரிழந்தார். வங்கியில் பணம் சிக்கியதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அவர் கடினமாக கஷ்டப்பட்டு தான் சம்பாதித்த பணம் வங்கியில் சிக்கிக்கொண்டது குறித்து தனது மகள் மற்றும் மருமகனிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.