ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை சிபிஐ நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால் சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் , இன்று ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ரூ. 1 லட்சம் பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 7 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றாலும், ப.சிதம்பரம் உடனடியாக வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது.
அமலாக்கத்துறை விசாரணை முடிந்ததும், வரும் 24ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.