தமிழகத்தின் கொரோனா பாதிப்பு விகிதமானது தேசிய சராசரி பாதிப்பைவிட அதிகமாக உள்ளது
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு தமிழக சுகாதாரச் செயலாளருக்கு மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த மாதத்திலிருந்தே கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இது போன்று நோய் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தின் கொரோனா பாதிப்பு விகிதமானது தேசிய சராசரி பாதிப்பைவிட அதிகமாக உள்ளது.
குறிப்பாக, தேசிய சராசரி 5.5 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தின் பாதிப்பு விகிதம் 6 சதவீதமாக உள்ளது எனவும், தமிழகத்தில் தஞ்சாவூர், சென்னை, கோவை, கிருஷ்ணகரி, தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நோய் பாதிப்பு விகிதம் 10 சதவீதமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நோய் பரவலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவேண்டும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது மற்றும் சமுதாய விழிப்புணர்வை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.