வாணியம்பாடி: ரயில்வே கேட் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறுத்தம்- கோட்ட மேலாளர் பேட்டி

ஏரி நீர் சுரங்கப் பாதையில் நிற்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது
சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு
சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு

'வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தின் அருகே, ஏரி உள்ளதாலும், அதன் உபரி நீர் சுரங்கப் பாதையில் நிற்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாலும், சுரங்கப்பாதை பணி நிறுத்தப்பட்டுள்ளதாக' தென்னக ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்று வரும் ரயில்வே திட்ட பணிகளை சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 'வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையின்படி சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அது முதலில் நிறுத்தப்பட்டது. அது இன்னும் நிலுவையில் உள்ளது.

காரணம், ரயில்வே சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தின் மிக அருகில் ஏரி உள்ளது. மேலும், அதில் இருந்து வெளியேறும் உபரி நீர் பாலம் கட்டும் பகுதியின் அருகாமையில் தான் வெளியேறிச் செல்கிறது. இதனால் உபரி நீர் சுரங்கப் பாதையில் நிற்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால், சுரங்கப்பாதை கட்டும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

மாற்று வழி மூலமாக மேம்பாலம் கட்ட வாணியம்பாடி சட்டமன்ற செந்தில்குமார், ஆலோசனை வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அதற்காக மாநில அரசு நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றி இடத்தை ஒதுக்க வேண்டும்.

மேலும், ரயில் நிலையம் வளர்ச்சிப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக ரூபாய் 1.25 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் நிலைய அலுவலக கட்டிடம் பணிகள் துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நவீன கட்டிடங்கள் கட்டப்படும். பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதி பணிகளும் செய்து தரப்படும்' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com