வால்பாறை அருகே மலுக்கபாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிறுத்தை, யானை, கரடி போன்ற விலங்குகள் குடியிருப்பு பகுதியில் சுற்றுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த சில தினங்களாக குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வால்பாறை அருகே உள்ள மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் மூன்று சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதை அங்குள்ள காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
வீட்டில் வளர்க்கும் ஆடு, கோழி, நாய் போன்ற செல்லப் பிராணிகளை சிறுத்தை கொன்று சாப்பிட்டு வருகிறது. குறிப்பாக, இரவில் குடியிருப்புகளுக்கு வந்து நாய், கோழி, ஆடு போன்றவைகளை வேட்டையாடி சாப்பிட்டுவிட்டு மீண்டும் தேயிலை தோட்டத்திற்கு செல்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதனால், சிறுத்தைகள் ஊருக்குள் வராத வண்ணம், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.