தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியானது. இதில், 1,026 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு தற்போது வெளியானது. 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வாயிலாக அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.
10-ம் வகுப்பு தேர்வில் 91.39 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 4,04,904 பேரும், மாணவிகள் 4,30,710 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம் போல இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே 6.50 சதவீதம் அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 90.07 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது இந்த சதவீதம் அதிகரித்துள்ளது.
மொத்தமுள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 12,638. இதில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,718 ஆகும். இதிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026 ஆகும்.
இது தொடர்பாக கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, 'அரசுப் பள்ளிகள் - 87.45 சதவீதமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் - 92.24 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
அதேபோல, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.38 சதவீதமும், இருபாலர் பள்ளிகளில் 91.58 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், பெண்கள் பள்ளிகள் - 94.38 சதவீதம் பேரும், ஆண்கள் பள்ளிகள் - 83.25 சதவீதம் பேரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்' என்றார்.