ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியம் இச்சிபுத்தூர் கிராமத்தில் ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரவி வருகையை அறிந்து, தி.மு.க-வினர் அந்த ரேஷன் கடையை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று புகார் எழுந்துள்ளது.
அரக்கோணம் ஒன்றியம் இச்சிபுத்தூர் கிராமத்தில் ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்தது.
இந்தக் கடையை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரவி திறப்பு விழா நடத்த போயுள்ளார். ஆனால், அதற்குள் கடையை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் பத்மநாபன் போய்விட, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரவி ஏமாற்றமடைந்தார்.
ஆனாலும், வெளியில் கட்டியிருந்த வாழை மரத்திற்கு ரிப்பன் கட்டி அதை வெட்டி விட்டு, 'தி.மு.க.வினர் மக்கள் நலன் நினைக்காதவர்கள், மக்கள் விரோத அரசு நடந்து கொண்டிருக்கிறது' என்று பேட்டி கொடுத்தார்.
இது தொடர்பாக, அரக்கோணம் தி.மு.க. சேர்மன் நிர்மலா சௌந்தரிடம் கேட்டபோது, ‘அது பஞ்சாயத்து யூனியன் கட்டிக்கொடுத்த கட்டிடம். அவர் சொல்லுகின்ற அன்று சேர்மன் கூட்டம் சென்னை மறைமலை நகரில் நடந்தது. அன்று நான் ஊரில் இல்லை.
மேலும், கடை கட்டி முடிக்கப்பட்டதும் கலெக்டருக்கு சொல்லிவிட்டோம். கலெக்டர் அமைச்சர் காந்தியிடம் சொல்லி திறப்பு விழாவிற்கு தேதி கேட்டுள்ளார்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ.ரவி வேண்டுமென்றே ஒரு ஷாமியானா பந்தலை போட்டு, இரண்டு வாழை மரங்களை கட்டிவிட்டு அரசியல் செய்துள்ளார்’ என்றார்.
- அன்புவேலாயுதம்