செல்போனுக்கு வந்த லிங்கை தொட்டதால் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதாக புதுச்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணா சர்மா புதுச்சேரி காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுவையைச் சேர்ந்த கிருஷ்ணா சர்மா, ஜிப்மர் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், அவரது செல்போன் எண்ணிற்கு கடந்த ஆண்டு ஆன்லைன் லிங் ஒன்று வந்துள்ளது. இந்த லிங்கை கிருஷ்ணா சர்மா தொட்டு பயன்படுத்தியுள்ளார்.
இதனால், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் பணம் திடீரென மாயமானது. இது குறித்து அவர், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
அதன் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கிருஷ்ணா சர்மாவின் வங்கி கணக்கில் இருந்து ஜார்கண்ட்டில் உள்ள வங்கிக் கணக்கிற்குப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதைக் கண்டுபிடித்தனர்.
இதற்கு காரணமான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அசாமுதின் அன்சாரி மற்றும் மகேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் ரூ.35 ஆயிரம் பணம் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த மோசடியில் முக்கிய குற்றவாளி ஜார்கண்டில் உள்ளதால், அவனைப் பிடிக்க ஜார்கண்ட் விரைந்துள்ளனர்.