கரூரில் 3 மணி நேரத்திற்கு மேலாக 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி பெண்மணி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்தவர் செல்வி (55). முட்டை வியாபாரியான செல்வி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேடசந்தூர் பகுதியில் சந்தையில் வியாபாரத்திற்கு சென்றபோது ஏற்பட்ட தகராறில் மீன் வியாபாரி முருகேசன் என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, செல்போன் டவரில் ஏறி 3 மணி நேரத்திற்கும் மேலாக கீழே இறங்கி வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார் மற்றும் அவரது மகன், மகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் ஒலிபெருக்கியில் வரச் சொல்லியும் தொடர்ந்து கீழே இறங்கி வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதிமொழி கூறியதன் பேரில், பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு கீழே இறங்கி வர சம்மதித்தார்.
இதைத்தொடர்ந்து, தீயணைப்பு படை வீரர்கள் செல்போன் டவர் மீது ஏறி அவரது இடுப்பில் கயிறு கட்டி பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
பின்னர், செல்விக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் காரணமாக தாந்தோணிமலை கடைவீதி சாலை, 3 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.