பா.ஜ.க பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கரின் படுகொலை தொடர்பாக அவரின் நண்பரின் மனைவி பிரசிதா என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பா.ஜ.க. பட்டியல் அணி மாநில பொருளாளருமான பி.பி.ஜி. சங்கர், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவரும், பா.ஜ.க. பிரமுகருமான சங்கர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை எனத் தெரிய வருகிறது. இது, தினம்தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருந்தார். பி.பி.ஜி.டி. சங்கர் கொலை வழக்கு தொடர்பாக 9 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கடந்த 2012ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பி.பி.ஜி. குமரன் படுகொலை செய்யப்பட்டது போலவே பி.பி.ஜி.டி. சங்கரும் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், பி.பி.ஜி. குமரனின் மனைவி பிரசிதா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், 'நீங்க எங்களை அழிச்சாலும் சரி, எங்களால் முடிந்த உதவியைச் செய்வோம். நாங்க இப்படித்தான் இருப்போம். இதுக்கு எல்லாம் நாங்க பயந்துபோகும் ஆள் இல்லை. உண்மை எப்போதும் வெற்றி பெறும். நாங்க நியாமான வழியில் சென்று கொண்டு இருக்கிறோம். ஏற்கனவே, ஒரு உயிரை எடுத்துட்டீங்க. இப்ப அடுத்த உயிரை எடுத்து இருக்கீங்க. எத்தனை உயிரை எடுத்தாலும் நாங்க உண்மையா, நேர்மையான வழியில்தான் செல்வோம். உங்களை மாதிரி ரவுடித்தனம் செய்துவிட்டு, அடுத்தவர்கள் குடியை கெடுக்கமாட்டோம்.
நீங்க எங்களை மண்ணோடு மண்ணாக போட்டு புதைச்சாலும், அந்த விதைதான் ஒரு நாள் மரமாக வளரும். மரத்தின் நிழலும், ஆக்சிஜனும், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதுபோல நாங்களும் இருப்போம்' என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.