காஞ்சிபுரம்: 2,112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியதில் முறைகேடு - 5 பொறியாளர்கள் சிக்கியது எப்படி?
காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் பகுதியில் கட்டப்பட்ட 2112அடிக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேகவதி ஆற்றில் கடந்த 2015 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், வேகவதி ஆற்றின் இருபக்க கரையோரங்களில் வசித்தவர்களின் வீடுகளினுள் மட்டுமின்றி அவர்கள் வசிக்கும் தெருக்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து அப்பகுதிகளே வெள்ளக்காடாக காட்சியளித்தது.
இதனால் ஒவ்வொரு மழைக்கும் அவதிக்குள்ளாகுவதை தடுக்க 2,112 வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கீழ்க்கதிர்பூர் பகுதியில் 6.99 ஏக்கர் பரப்பளவில் 33 பிளாக்குகளுடன் கூடிய 2112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இந்த கட்டுமான பணிகளை சென்னை அண்ணா நகரில் செயல்படும் ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டது.
அதன்படி உரிமையாளருக்கு சாதகமாக வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளராக பணிபுரியும் தேவதாஸ், தலைமை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள ராஜி, இளநிலை பொறியாளர் சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம் சிறப்பு கோட்டத்தில் நிர்வாக பொறியாளராக பணிபுரிந்த மாலா, உதவி செயற்பொறியாளர் திருப்பதி ஆகியோர் செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
கட்டுமான திட்ட மதிப்பீட்டில் அடித்தளத்தின் உயரத்தை குறைத்து அதில் மண் நிரப்பாமல் மோசடி செய்துள்ளது. ஆனால் பொறியாளர் உதவியுடன் மண் நிரம்பியது போல கணக்குகாட்டி பணமோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு முறையாக ஒப்பந்ததாரர் தான் மின் இணைப்புடன் குடியிருப்புகளை ஒப்படைத்திருக்க வேண்டும்.
ஆனால், அப்படி இல்லாமல் மின் இணைப்பை கட்டணத்தை பயனாளிகள் தான் செலுத்தும்படி செய்துள்ளது. இதனால் பயனாளிகள் மின் இணைப்பு பெற 6,000 ரூபாய் வரை செலுத்தி மின் இணைப்பை பெற்றதாக கூறப்பட்டது.
மேலும், மண்ணின் தன்மையை ஆய்வு செய்து கட்டிட வடிவமைப்புடன் சென்னை ஐ.ஐ.டி. அல்லது அண்ணா பல்கலைக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் தனிப்பட்ட நபர் ஒருவர் கட்டிடம் வடிவமைப்பு செய்து அதை அண்ணா பல்கலை பேராசிரியர் ஒருவர் திருத்தம் செய்துள்ளார்.
அதிலும் மோசடி நடந்தேறியிருப்பதும், கட்டுமான பணிகளுக்கு தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
வாரிய பொறியாளர் ஒப்பந்ததாரருக்கு சாதகமாக செயல்பட்டு அரசு மற்றும் வாரியத்திற்கு 32.17 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தி உள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
அதற்கு பலனாக கோடி கணக்கில் லஞ்ச பணம் கைமாறி உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனையெடுத்து தேவதாஸ் உள்ளிட்ட பொறியாளர்கள் 5 பேர் மற்றும் ஒப்பந்ததாரர் சரண் பிரசாத் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.