நாட்டிலேயே இதுதான் முதன்முறை: காணொலி வடிவத்தில் பள்ளி பாடங்கள்

நாட்டிலேயே முதன்முறையாக காணொலி வடிவில் பள்ளி பாடங்களை அறிமுகம் செய்யும் ‘மணற்கேணி’ செயலி அறிமுகம்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

தமிழகத்தில் உள்ள கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகளை துரிதமாக மேற்கொள்ள தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், இதற்காக தேர்ந்த வல்லுனர்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.

இதில், மாணவர்களுக்கு எளிதில் புரியும்படியாக பாடங்கள் மற்றும் வகுப்பறைகளை மேம்படுத்தும் வகையில், காணொலிப் பாடங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

தமிழிலும், ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் பயிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கென உள்ள பாடங்களை 27,000 கருப்பொருள்களாக வகை பிரித்துள்ளது. அதற்கேற்றபடி, காணொலி வாயிலான விளக்கப் பாடங்களை உருவாக்கியுள்ளது.

நாட்டிலேயே முதன் முதலாக ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுனர்களைக் கொண்டு உருவாக்கியுள்ள இத்தகைய செயலி இதுவே. இச்செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள் அதில் உள்ள பாடப்பொருட்களின் துணைகொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்த முடியும்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் இந்த முயற்சியால் 25 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும், இந்த திட்டம் மூலம் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com