திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வேன் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், காதல் மனைவிக்கு அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (30) டிரைவர். இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார்.
இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வினோதினி (25)என்ற பெண்ணுடன் காதல் திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு 8 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த ஒரு மாதமாக வேடசந்தூரில் உள்ள உசேன்ராவுத்தர் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வினோதினி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை 11 மணியளவில் தனது தந்தையிடம் செல்போனில் பேச பல முறை முயற்சி செய்துள்ளார். ஆனால், அவர் தந்தை செல்போன் எடுக்கவில்லை.
இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, அவரது தந்தை மற்றும் அக்கம் பக்கத்தினர் வேடசந்தூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், தனது செல்போனில் தனது இறப்பிற்கான காரணம் குறித்து வீடியோ பதிவு செய்துள்ளார்.
அதில், தனது மனைவி வினோதினி 3 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு சென்று விட்டார் என்றும், இதனால், தனது தம்பிக்கு கால்குலேட்டர் கூட வாங்கி கொடுக்க முடியவில்லை என்றும் கண்ணீர் சிந்தி பேசியுள்ளார்.
மேலும், தனது பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும், தன்னை தனது தாயும், தம்பியும் மன்னித்துக் கொள்ளும்படியும் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.