பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை - மாஜி டி.ஜி.பி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை

பெண் எஸ்.பி-க்கு, ராஜேஷ் தாஸ் காரில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்
ராஜேஸ் தாஸ்
ராஜேஸ் தாஸ்

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், குற்றவாளி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி சுற்றுப்பயணம் செய்தார். முதலமைச்சரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் நியமிக்கப்பட்டார். அப்போது, பெண் எஸ்.பி-க்கு, ராஜேஷ் தாஸ், காரில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பியாக இருந்த ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும், ராஜேஷ் தாஸ் உத்தரவின்பேரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டியதாக, செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 68 சாட்சிகளின் வாக்குமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதியன்று நிறைவடைந்தது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், 16ம் தேதி வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி அறிவித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று காலை விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பை அறிவித்தார்.

அதில், பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் ராஜேஷ் தாஸ் குற்றவாளி என்றும், குற்றவாளி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து் நீதிபதி உத்தரவிட்டார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com