’நிறைய நகைச்சுவை படங்கள் நடித்திருந்தாலும், ஒற்றை படம் பெரிய பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது.இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது’ என வடிவேலு நெகிழ்ச்சியாக பேசினார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘மாமன்னன்‘ திரைப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், மாமன்னன் திரைப்படத்தில் பிளாஸ்பேக் காட்சிகளில் நடித்த அனைவருக்கும் நன்றி. வடிவேலு அண்ணன் இல்லையென்றால் மாமன்னன் இல்லை. கதை முடிவாச்சி மாமன்னன் கதாபாத்திரத்தில் வடிவேல் சார் நடிக்க வைக்கலாணு முடிவு செய்தோம்.
ஒருவேலை வடிவேல் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் இதை டிராப் செஞ்சிட்டு வேற படம் பண்ணலானு இருந்தோம். அப்புறம் வடிவேலு அண்ணன் இந்த கதையை நான் பண்றேன் அப்படினு ஒத்துக்கிட்டாரு.அப்படிதான் இந்த படத்திற்கு ஒன்னு ஒன்னும் பிளஸ் பாயிண்டா அமைஞ்சது.அதேபோல் மாமன்னன் படத்தின் வெற்றிக்கு ஃபஹத் பாசில் பிரதரும் முக்கிய காரணம். அவரால் இந்த விழாவிற்கு வரமுடியவில்லை. இந்த நேரத்தில் அவருக்கு நான் நன்றி தெரிவிச்சிக்கிறேன் என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், ”உதய் சார் நினைச்ச மாதிரி படத்தை எடுத்துக்கொடுத்துள்ளோம். அதற்கு என்னுடன் பணியாற்றிய குழுவிற்கு நன்றி. நான் பேசுவதை உதய் சார் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆகையால் ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிகிறேன் சார். நான் பாடுவது பழைய பாடலாக இருக்கலாம்.அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன். என் வயிற்றில் இருந்து குடலை உருவி ஓரிழை ஆளாக மாற்றி அதை தெரு, தெருவாக மீட்டு வருவேன்.உண்மையை கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டே இருப்பேன்” என தெரிவித்தார்.
பின்னர் பேசிய நடிகர் வடிவேலு, ”நான் அதிகமாக நகைச்சுவை படங்களில் நடித்துள்ளேன்.மொத்த நகைச்சுவை படத்திற்கும் ஒற்றை படம் பெரிய பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது. இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. மாரி செல்வராஜ் கதை சொல்லும் போதே அவரிடம் இருந்த பாசம், உணர்வு ஆகியவை 30 படங்களை இயக்கிய இயக்குநருக்கு இருந்ததை உணர்ந்தேன்.இதை ஓகே சொல்ல வைத்ததற்கு உதயநிதி தான் காரணம். மாரி செல்வராஜ் இந்த மாதிரி படத்தையே இயக்கி உடம்பை கொடுத்துக்கொள்ளாதீர்கள். நகைச்சுவையான படங்களை இயக்குங்கள் என அட்வஸ் வடிவேலு அட்வைஸ் செய்தார். மேலும், மாமன்னன் படத்திற்கு இப்படி ஒரு வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. படத்தில் 6 காட்சிகள் என்னை தூங்க விடவில்லை. குறிப்பாக மலை உச்சியில் நான் அழும் காட்சியை பார்த்து நானே கதறி அழுதேன்” என நெகிழ்ச்சியாக பேசினார்.
இதையடுத்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ”எல்லாப்புகழும் இறைவனுக்கே.எனக்குள் 20-30 ஆண்டுகளாக இருந்த ஆதங்கம் தான் இந்தக் கதை. ஏன் இப்படி நடக்கிறது? என ஆதங்கப்பட்டிருக்கிறேன்.என்னால் இசையில் எதுவும் பண்ண முடியவில்லை. யார் செய்கிறார்களோ அவர்களுடன் இணைந்து விட்டேன். படம் இந்த அளவுக்கு சிறப்பாக வரும் என நினைக்கவில்லை. உதயநிதியுடன் பைக்கில் வடிவேலு செல்லும் காட்சியை பார்த்ததும் படத்தை சிறப்பாக கொடுக்க முடிவு செய்தேன் என்று பேசினார். மேலும், ராசா கண்ணு பாடலுக்கான ஐடியாவும் அங்கு தான் தோன்றியது” என தெரிவித்தார்.