80-வது வயதில் அடியெடுத்து வைக்கும் இளையராஜாவுக்கு பாரதரத்னா, தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
முத்து விழா ஆண்டில், 80-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் இளையராஜாவுக்கு பாரதரத்னா, தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசைக்கே ராஜாவாக வலம் வரும் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவிற்கு 80 வயது ஆனதையொட்டி இரண்டு தினங்களுக்கு முன்பு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அவருக்கு சதாபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதியில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இளையராஜாவுக்கு பாரதரத்னா, தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “முத்து விழா ஆண்டில், 80-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசைச்சக்கரவர்த்தியான அவர் நூற்றாண்டு காண பிரார்த்திக்கிறேன். இசைஞானியின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். தாயின் தாலாட்டில் மயங்கி கண்ணுறங்கியது நான்கு ஆண்டுகள் என்றால் இந்த ஞானியின் தாளங்களில் மயங்கி கண்ணுறங்கிய காலம் நாற்பதாண்டுகளுக்கும் அதிகம். எனது மகிழ்விலும், கவலையிலும் இசையாய் இளையராஜா என்னுடன் இருப்பார்.
மனக்காயங்களுக்கு இசை மருந்து போடுவதால் அவரும் ஒரு மருத்துவர். பயணத்தில் துணை வருவதால் அவர் இனிய வழித் தோழர். எவராலும் வெறுக்க முடியாத எல்லோராலும் நேசிக்க முடிந்த மனிதர்களில் முதலாமவர் இளையராஜா. அவரது இசைச் சேவை தொடர வேண்டும். இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ள இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த பாரதரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே எனது விருப்பம்; அது வெகுவிரைவில் நிறைவேற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.