வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு விடுதலை என பெயரிடப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் முற்றிலும் மாறுபட்ட களங்களில், தன் தனித்த முத்திரை கொண்ட படங்களினால் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து புகழ்பெற்றுள்ளார். தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அழுத்தமான கதைகள் கொண்ட வெற்றி படங்களை தந்து மிக சிறந்த தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.
இவ்விருவரும் தற்போது ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார்கள். “விடுதலை” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி முன்னணி பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக இப்படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியம்ங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி, பவானிஶ்ரீ உட்பட மொத்த படக்குழுவும் அங்கேயே குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி, தங்கி படப்பிடிப்பை நடத்துகின்றனர்.
“அசுரன்” படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைகளத்துடன், திரில்லான திரைக்கதையுடன் ரசிகர்களை அசத்தவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.