குறிப்பிட்ட சேவைகளை வழங்க வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் செல்போன் எண்களை கேட்டு வற்புறுத்தக்கூடாது என்று மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
தற்போதைய நவீன காலக்கட்டத்தில் மக்கள் எங்கு பொருட்கள் வாங்க சென்றாலும், சேவைகளை நாடி சென்றாலும், எங்களிடம் அந்த ஸ்கீம் உள்ளது, அந்த ஸ்கீம் உள்ளது, உங்கள் நம்பர் கொடுத்தால் மெசெஜ் வரும் என வாடிக்கையாளர்களிடம் செல்போன் எண்களை வாங்க தொடங்கி விட்டார்கள். சிலர் வலுக்கட்டாயமாகவும் வாங்குகிறார்கள். அதுமட்டுமா பில் போடுவதற்கு கூட போன் நம்பர் கேட்கிறார்கள். ஆனால் இந்தியாவில் சில்லரை வியாபாரி பில் போடுவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண்களைத் தரவேண்டியது கட்டாயம் இல்லை.
இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு செல்போன் எண்களைத் தருமாறு சில்லரை வியாபாரிகள் வற்புறுத்துவதாகவும், தர மறுத்தால் அவர்களுக்கு சேவைகள் வழங்கப்படுவதில்லை எனவும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு புகார்கள் சென்றுள்ளன. மேலும் அதில் வியாபார பரிமாற்றங்களை செய்ய வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை கேட்பதோடு, பெரும்பாலான நேரங்களில் வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு கூடவிடுவதில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனை பரிசீலித்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம், இது தொடர்பாக சில்லரை வியாபாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங் கூறுகையில், “வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட தொடர்பு எண் விவரங்களைத் தரவில்லை என்றால், பில் போட முடியாது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நியாயம் இல்லாத, கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை. இப்படி தகவல்களை சேகரிப்பது தவறானது. இதில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட ரகசியங்கள் பற்றிய கவலையும் அடங்கி இருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்களின் நலனைப் பேணுகிற வகையில், குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்களைத் தரவேண்டும் என்று சில்லரை வியாபாரிகள் யாரையும் வற்புறுத்தக்கூடாது என சில்லரை வியாபாரத்துறைக்கும், இந்திய தொழில் சம்மேளனத்துக்கும், இந்திய வர்த்தக தொழில் சம்மேளனத்துக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.