புழக்கத்திலிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு புதிய 500 ரூபாய் நோட்டுகளும் 2000 ரூபாய் நோட்டுகளும் அறிமுகபடுத்தப்பட்டது. இதனை அச்சிடும் பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்கியது.
மற்ற வகை ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்ததால் 2018 -19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் ரூ.2000 நோட்டுகளின் பணபுழக்கமும் நாளடைவில் குறைந்தது. இந்த சூழலில் தான் ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
1. "க்ளீன் நோட் பாலிசியின்" படி, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. வரும் 23 ஆம் தேதி முதல் பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
3. நாளொன்றுக்கு 20,000 ரூபாய் வரையிலான 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.
4. இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.
5. செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே இந்த நோட்டுகள் சட்டபடி செல்லும்.
6. வங்கிகளும் 2000ரூபாய் நோட்டுகளை வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
7. அனைத்து வங்கிகளும் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதை, கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் செய்து முடிக்கவும், பொதுமக்களுக்குப் போதுமான நேரத்தை வழங்கவும், 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் அல்லது மற்ற நோட்டுகளாக மாற்றும் வசதியை செய்யவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8. இந்த விவகாரத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) பற்றிய ஆவணம் பொதுமக்களின் தகவல் மற்றும் வசதிக்காக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
9. பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது எந்த வங்கிகளின் கிளையிலும் 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து மற்ற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.