சீர்காழியில் சட்டை நாதர்சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. மேலும், கோயிலின் 4 கோபுரங்கள், சுவாமி அம்மன் விமான கலசங்கள், மலைக்கோயில் விமானகலசம் உள்ளிட்டவைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர் உமா மகேஸ்வரிஅம்மன், சட்டைநாதர் ஆகிய சுவாமிகள் 3 நிலைகளில் காட்சி தருகின்றனர்.
திருஞானசம்பந்தர் பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய அற்புத ஸ்தலமாகும். காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவர்கள் இக்கோயிலில் தனி சன்னதியில் காட்சி தருகின்றனர்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முடிவு செய்து, அதற்கான திருப்பணிகள் தொடங்கி ரூ.20கோடி செலவில் நடைபெற்றுவந்தது.
முத்துசட்டைநாதர் சுவாமி, திருஞானசம்பந்தருக்கு கருங்கல் மண்டபம், கருங்கல் பிரகாரங்கள், மேள்தளம் புதுப்பித்தல், வர்ணபூச்சு என திருப்பணிகள் சிறப்பாக நடந்துமுடிந்து.
கடந்த சனிக்கிழமை 8 கால யாகசாலை பூஜைகள் 11 பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. இன்று 4 கோபுரங்கள், சுவாமி அம்மன் விமான கலசங்கள், மலைக்கோயில் விமான கலசம் உள்ளிட்டவைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை செளந்தர்ராஜன், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு, செளந்தர்ராஜன் , அரசு உயர் அதிகாரிகள், பல்வேறு மடத்து ஆதீனங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் கோயில் மீது மலர்கள் தூவப்பட்டது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.