கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறுகிறது
உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கியது. இந்த விழாவில் ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில்.
இந்த கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் 7 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திரளான பொதுமக்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா, சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
பொது மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து கூழ் மற்றும் கஞ்சிக் குடங்களுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். அதனைக் கூத்தாண்டவர் கோவில் அருகில் உள்ள அம்மன் கோவிலில் வைத்து, மாவிளக்கு ஏற்றி, படையல் போட்டு, தேங்காய் உடைத்து, தீபாராதனை காட்டி வழிபட்டனர். பின்னர், பொது மக்களுக்குக் கூழ், கஞ்சி வழங்கப்பட்டது.
இந்த விழா 18 நாட்கள் நடைபெறுகிறது. இதில், முக்கிய நிகழ்வான சாமி திருக்கண் திறந்தல் மற்றும் திருநங்கைகள் தாலி கட்டுதல் நிகழ்ச்சி அடுத்த மாதம் இரண்டாம் தேதியும், அதற்கு அடுத்த நாள் 3ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். 4ம் தேதி விடையாத்தியும், இதனைத் தொடர்ந்து 5ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.