ராவணனை அழித்தது ராமரா? விநாயகரா?

ராவணனை அழித்தது ராமரா? விநாயகரா?
ராவணனை அழித்தது ராமரா? விநாயகரா?

ராமர் வானர சேனையின் உதவியோடு ராவணனை அழித்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்

ராமர் வானர சேனையின் உதவியோடு ராவணனை அழித்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்குப் பல காலங்கள் முன்பாகவே அவனை அழிக்க வழி செய்து கொடுத்தவர் விநாயகர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. 
ராவணன் மரணமே இல்லாத அமர வாழ்வு வாழ வேண்டும் என்று மிகவும் விரும்பினார். சிவ பக்தரான அவர், இமய மலையில் இருந்த அடர்ந்த காடுகளில் கடுமையாக தவம் செய்தார். இறைவனைக் குறித்து பல பாடல்களையும் இசையமைத்துப் பாடியும், உணவு, நீர் எதுவும் இல்லாமல் தவம் செய்தும் சிவபெருமானின் மனதைக் குளிர வைக்க முயற்சி செய்தார். பல ஆண்டுகள் கழித்து சிவபெருமான் ராவணனுக்குக் காட்சி கொடுத்து, வேண்டும் வரத்தைத் தருவதாக வாக்களித்தார். "எனக்கு இறப்பே வரக் கூடாது, நான் உயிரோடு இருக்கும் வரை யாரும் என்னைத் தோற்கடிக்கக் கூடாது! இந்த இரு வரங்களையும் எனக்கு வழங்குங்கள் ஈசனே!" என்று இறைஞ்சினார் ராவணன். கேட்டவர்களுக்குக் கேட்ட வரம் அளிக்கும் கருணாகரனான இறைவனும் மிகவும் புனிதமான ஆத்மலிங்கத்தை அளித்து. "இந்த லிங்கத்தை உன் அரண்மனையில் பிரதிஷ்டை செய்து, முறைப்படி பூஜித்தால் உனக்கு அழிவே இல்லை, உன்னை யாராலும் வெல்லவே முடியாது. ஆனால் நீ இந்த ஆத்ம லிங்கத்தை எடுத்துச் செல்லும் வழியில் இதை எங்கேயும் கீழே வைக்கவே கூடாது. ஆத்மலிங்கம் கீழே வைக்கப்பட்டு விட்டால் பிறகு அங்கிருந்து அதை எடுக்கவே முடியாது." என்று அருளிச் செய்தார். மிகவும் மனம் மகிழ்ந்த ராவணன், ஆத்மலிங்கத்தை பக்தியோடு வாங்கி புஷ்பக விமானத்தில் இலங்கையை நோக்கிப் பறக்க ஆரம்பித்தார்.
அதைப் பார்த்த தேவர்கள் ரிஷிகள், மற்றும் முனிவர்கள் ராவணன் அழிவில்லாத வரத்தைப் பெற்று விட்டால் பிறகு அவரது ஆணவத்தையும், அராஜகத்தையும் மக்களால் தாங்க முடியாது. ராமாவதாரமும் நிகழாது என்று கவலை கொண்டனர். எப்படியாவது ஆத்மலிங்கத்தை போகும் வழியில் எங்காவது கீழே வைக்கும் படி செய்ய வேண்டும், அப்படிச் செய்தால் தான், ராவணனை வெல்ல முடியும் என்று முடிவெடுத்து, விநாயகப் பெருமானின் உதவியை நாடினர். உதவி செய்வதாக ஒப்புக்கொண்ட அவரும் ஒரு சிறுவனைப் போல உருமாறி பூவுலகம் வந்தார். 
மாலை நேரத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியை நெருங்கிய சமயத்தில் ராவணனுக்கு இயற்கை உபாதை ஏற்பட விமானத்தை விட்டுக் கீழே இறங்கினார். அவரது கைகளில் ஆத்மலிங்கம் இருந்தது. அதை எங்குமே கீழே வைக்கக் கூடாது என்று இறைவன் கூறி இருந்ததால் என்ன செய்ய? என்று யோசித்தார் ராவணன். அப்போது ஆடு மேய்க்கும் சிறுவன் போல அங்கே வந்தார் கணபதிப் பெருமான். "இந்த லிங்கத்தை சிறிது நேரம் கையில் வைத்துக்கொள்! நான் சிறிது நேரத்தில் திரும்பி வந்து விடுகிறேன்!" என்றார் ராவணன். இந்த சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்த விநாயகர் உடனே ஒப்புக் கொண்டார், கூடவே ஒரு நிபந்தனையும் விதித்தார். "நான் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும். இல்லையென்றால் என் முதலாளிகள் என்னை கோபித்துக் கொள்வார்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் நான் மூன்று முறை குரல் கொடுப்பேன். அதற்குள் நீங்கள் வரவில்லை என்றால் நான் லிங்கத்தைக் கீழே வைத்து விட்டுப் போய் விடுவேன்!" என்றான் சிறுவன். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட ராவணன் சென்று விட்டார். 
சில நிமிடங்களுக்குப் பிறகு ராவணனை மூன்று முறை அழைத்து விட்டு அவர் வருவதற்குள் ஆத்ம லிங்கத்தைக் கீழே வைத்து விட்டார். அவசரமாக வந்த ராவணன், லிங்கத்தை எடுக்க முயற்சி செய்தார். என்ன முயன்றும் அவரால் அதை எடுக்கவே முடியவில்லை. மிகவும் கோபம் கொண்ட அவர், சிறுவனை கடுமையாக நிந்தனை செய்து தலையிலும் அடித்தார். ஆனால் அதைப் பற்றிக் கவலைப் படாத விநாயகர், ராவணனுக்குக் காட்சி கொடுத்து அருளினார். ஓரளவு மனம் சமாதானம் அடைந்த ராவணன் ஆத்மலிங்கம் இல்லாமலே சென்று விட்டார். 
அப்படி விநாயகரால் ஸ்தாபிக்கப்பட்ட ஆத்மலிங்கம், கர்நாடக மாநிலம் கோகர்ணம் என்ற இடத்தில் இருக்கிறது. மஹாபலேஸ்வர் என்ற பெயரில் ஈசன் எழுந்தருளி இருக்கும் இந்தக் கோயிலில் மஹாகணபதி சன்னதி உள்ளது. ஐந்தடி உயரம் உள்ள மகாகணபதி சிலையின் தலைப் பகுதியில் சற்றே சேதம் ஏற்பட்டுள்ளது. அது ராவணன் அடித்ததால் ஏற்பட்டது என்று ஸ்தல புராணம் கூறுகிறது. ராமாவதாரத்துக்கு அடிகோலிய மஹாகணபதி சாந்த சொரூபியாக அமைதியாக அருள் பாலிக்கிறார். செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் குடும்பத்தோடு சென்று ஆத்மலிங்கத்தை தரிசித்து வணங்கி, மகாகணபதியையும் கும்பிட்டு வாழ்வில் உய்வோம்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com