மசோதாக்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மசோதாக்கள் மீது முடிவெடுக்க, ஆளுநர்கள் மற்றும் குடியரசு தலைவர் கால வரம்பு நிர்ணயம் செய்த விவகாரத்தில் இன்று (நவ., 20) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க, ஆளுநர்கள் மற்றும் குடியரசு தலைவர் கால வரம்பு நிர்ணயம் செய்த விவகாரத்தில் இன்று (நவ., 20) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், 'மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்' என, ஆளுநர்கள் மற்றும் குடியரசுதலைவருக்கு வரம்பு நிர்ணயித்து தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தையே வழக்காக மாற்றிய தலைமை நீதிபதி கவாய், இதன் மீது ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தார்.
அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தது. கடந்த செப்., 11ல் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (நவ.,20) ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பு கூறித்து நீதிபதிகள் கூறியதாவது:
* சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாவை ஆளுநர் கால வரம்பின்றி நிறுத்தி வைக்க முடியாது. கவர்னர் நீண்ட காலமாக மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
* அதே நேரத்தில் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிப்பது, அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.
* அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின்படி மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன. ஒப்புதல் அளிக்கலாம். அல்லது நிராகரிக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம். நான்காவது வாய்ப்பு கிடையாது.
* ஆளுநர்களின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது. அதே நேரத்தில் நீண்ட காலம் மசோதாவை கிடப்பில் வைத்திருந்தால் நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய முடியும்.
* மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களின் கருத்துக்களை கேட்க தேவையில்லை. இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
What's Your Reaction?

