About us | Register | E-Shopping | Subscribtion Enquiry |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map  
News Headline
வணக்கம்:
Edit Profile
Logout
Home
Kumudam Welcomes U
          Magazine
Kumudam Theeranadi
நேர்காணல்
சிறப்பு கட்டுரைகள்
தொடர்கள்
சிறுகதை
மற்றவை
 
 01.04.08    சிறப்பு கட்டுரைகள்

து ஒரு வெப்பம் மிகுந்த நண்பகல் பொழுது. முதிரா பலாப்பிஞ்சுகளும் மாம்பிஞ்சுகளும் மரங்களை அடைத்திருந்த வேனிற்காலம். காஞ்சிபுரம் நகரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு நோக்கி சென்று கொண்டிருந்தேன். செய்யாறு அருகிலுள்ள வெம்பாக்கம் என்னும் ஊரில் கிராமப்புற படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்து கொண்டிருந்தது. வியர்வையில் நனைந்த முகங்களில் படிப்புக்கேற்ற வேலையும், வேலைக்கேற்ற ஊதியமும் கிடைக்க வேண்டுமே என்ற ஏக்கம் வழிந்தது. நம்பிக்கையூட்டும் வகையில் அரசாங்கத்தின் முயற்சிகளையும் திட்டங்களையும் எடுத்துரைத்து, தனியார் நிறுவனங்கள் சில, வேலைவாய்ப்புக்கென கொடுத்த உறுதிகளையும் முன்னின்று மொழிந்த போது உணவு வேளை தாண்டி விட்டது. உணவைப் பற்றி யாரும் யோசித்திருக்கவில்லை.

உடன் வந்திருந்த நண்பர் முனைவர் கலைநேசன், `இங்கே அமர்ந்து உணவு உட்கொள்ளும்படியான வசதியான உணவு விடுதியில்லை. வாருங்கள். காஞ்சிபுரம் செல்லலாம்' என அழைத்தார். தொலைவைக்கருதி அங்கிருந்த சுகாதாரமற்ற சிறு உணவு விடுதியில், இடமில்லாத காரணத்தால் ஐவர் ஐவராக உணவு உண்ண முடிவெடுத்தோம். வண்டி ஓட்டுநர் உட்பட இன்னும் சிலர் பசியாற வேண்டிய சூழலில் என்னை சற்று நேரம் உட்கார வைக்க இடமின்மையால் அருகிலுள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

கோடை விடுமுறை அப்போது துவங்கி விட்டிருந்தது. எனினும் அப்பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்குக் கோடை முகாம் நடந்து கொண்டிருந்தது. பள்ளிச் சிறுவர்களுடன் உரையாட கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அவர்கள் அமர்ந்திருந்த அறைக்குள் சென்றேன். அனைவரும் சிறுவர்கள் - சிறுமிகள் எனத் தனியாக அணிவகுத்து அமர்ந்திருந்தனர். ஏழை முகங்கள் பெரும்பாலானவை. அவர்கள் என்னைக் கண்டதும் எழுந்து நின்று `வணக்கம் டீச்சர்' என்று கலவை ஒலித்தனர். வெயிற்பொழுதின் கடுமையைக் குறைத்தது கள்ளமில்லா முகங்களில் கோடிட்டப் புன்னகை.

வணக்கம் கூறி அமர்ந்த நான், என்னை அறிமுகப்படுத்தியதால் ஏற்பட்ட மெல்லிய அதிர்வைக் கலைக்க அவர்களைப் பாட்டுப் பாடும்படி அழைத்தேன். சற்று நேரம் கசமுச கசமுச! ஆசிரியரின் பெயர் சொல்லி அழைத்தல். பிறகு ஒரு சிறுமி பாட ஆரம்பித்தாள். மழலைப் பாட்டுக்கள் மயக்கங்கொள்ளச் செய்பவைதானே? அச்சிறுமி பாடிய விதமும் அவள் பாடியதற்கான எதிர்வினையாக சிறுவர்களும் சிறுமிகளும் தலைகுனிந்து கொள்வதும் மெல்லச் சிரித்துக் கொள்வதும் ரசிக்கும்படியாக இருந்தன. நானும் சிரித்துக் கொண்டேன். எதற்கோ?

பாட்டு முடிந்தது. இறுக்கம் கலைந்தது. ``டீச்சர் முருகேசன் நல்லாப்பாடுவான் டீச்சர்'' சிறுவர்கள் மத்தியிலிருந்து ஒரு குரல்.

``சரி பாடட்டும்''

அவனும் பாடினான். அப்போதும் சிறுவர் சிறுமியர் மத்தியில் கிளர்ச்சி அலைகள் எழுந்து அடங்கின.

பாட்டுகள் முடிந்தன, அடுத்து என்ன? இனி என்னுடைய முறையல்லவா? நான் எதுவும் யோசிக்காமல் இயல்பாக பேச்சை ஆரம்பித்தேன்.

``ஆணும் பெண்ணும் சமமா?'' என் கேள்வி அங்கே குழுமியிருந்தவர்களிடம் எவ்வித இடறலையும் ஏற்படுத்தவில்லை என்பதை உடனே அறிந்து மகிழ்ந்தேன். ஏனெனில் உடனே சிறுமிகள் மத்தியில் `சமம், சமம்' என இரண்டு முறை குரல்கள் ஒலித்தன. ஆனால் சிறுவர்கள் ஏதும் பேசாமலிருந்தனர். இது சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது என்னுள்.

``என்ன ஆம்பிளைப் பிள்ளைகளெல்லாம் பேசாமலிருக்கீங்க?'' சாம்பலைக் கிளறியது போலிருந்தது என் கேள்வி.

``என்ன பேசாம இருக்கீங்க?'' பூட்டுத் துவாரத்தில் சாவியைத் திருகுவது போல் திரும்பவும் என் குடைச்சல் ஒலித்தது.

``அவங்க சொல்றது சரிதான் டீச்சர். ஆனா...''

``என்ன ஆனா? ஆவன்னா?'' எனது ஆவன்னாவினால் சற்றே பயந்த சிறுவர்கள், ``ஆனா அவங்க சுதந்திரமா இல்லையே'' என்ற ஒரு சிறுவனின் குரலால் தங்களை வெளிப்படுத்தினார்கள்.

பரவாயில்லையே என்று வியந்து கொண்ட நான் விபரங்கேட்டேன்.

``பின்னே என்ன டீச்சர், அவங்க சாயந்தரம் ஆனா வீட்டுக்குள்ளே அடைஞ்சி டி.வி. சீரியல் பாக்கிறாங்க. எங்களைப் போல வெளியே வந்து வெளையாட மாட்டேங்குறாங்களே!'' சிறுவன் ஒருவன் சொல்லவும், மற்ற சிறுவர்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

உடனே ஒரு சிறுமி எழுந்து ``நாங்களா வெளியே விளையாட மாட்டேங்குறோம். எங்களை வெளியே விளையாட விட்டாத்தானே? எங்களுக்கு சுாதந்திரமே இல்ல'' என்றார்கள். மற்ற சிறுமிகள் ஆமோதித்தனர்.

``ஒருவேளை பெண்கள் மட்டும் விளையாட கிராமத்திலே விளையாட்டுத்திடலும் அதற்கான உபகரணங்களும் இருந்தால் பெண்களும் விளையாடுவார்கள்தானே?''

சிறு விதையைப் போட்டு வைத்தேன். எல்லா கிராமங்களிலும் பெண்கள் விளையாடுவதற்கான- குறிப்பாக இளம் பெண்கள் விளையாடுவதற்கான- இடத்தையும் அவர்களின் வகைவகையான விளையாட்டுக்களையும் பற்றி நான் கற்பனை செய்யத் துவங்கினேன் என்பது வேறு விஷயம்.

``எல்லா கிராமங்களிலும் பெண்கள் விளையாடுவதற்கான இடங்களை யார் ஏற்படுத்தித்தர முடியும்?'' நான் கேட்டேன்.

``அந்தந்தப் பள்ளிக்கூடங்கள்''

``அவன் சொல்றது தப்பு டீச்சர். அரசாங்கம்தான் ஏற்படுத்தித் தரவேண்டும்.''

சரியான விடை சொல்லிய சிறுமியைப் பாராட்ட ஒரு `சபாஷ்' உடன் ஒரு பத்து ரூபாய்த்தாள் பரிசளிக்கப்பட்டது. பரிசு பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரும் பேச வேண்டும் என்ற எண்ணத்தை அது உருவாக்கியதாக நான் எண்ணிக்கொண்டேன்.

``எந்த அரசாங்கம் இதுவரை பெண்களைப் பற்றி அதிகம் சிந்தித்து அக்கறையுடன் செயல்பட்டுள்ளது?'' என் கேள்வி குழப்பத்தை - அதாவது மத்திய அரசாங்கமா அல்லது மாநில அரசாங்கமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று எண்ணினேன். ஆனால் குழப்பமேயில்லாமல் மாணவிகளிடமிருந்து பதில் வந்தது.

எந்த அரசும் இதுவரை பெண்கள் குறித்து அக்கறையுடன் செயல்படவில்லை என்பது அவர்கள் பதிலாக இருந்தது. அந்த ஒருமித்த குரல் ஆச்சரியப்படுத்தியது. பெண் குழந்தைக் கல்வி உதவித் திட்டம், திருமண உதவித்திட்டம், பேறுகால உதவித்திட்டம், விதவைகள் பென்ஷன் திட்டம், கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித் திட்டம், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடு திட்டம், வரதட்சனை ஒழிப்புச் சட்டம், சிசுக்கொலை தடுப்புச்சட்டம், விவகாரத்து ஜீவனாம்சத்திற்கான சட்டம், ஆண் பெண் சமக்கூலி சட்டம், மற்றும் சமீபத்திலான குடும்ப வன்முறைச் சட்டம் ஆகிய இத்தனைச் சட்டங்களும் பல்வேறு திட்டங்களும் இயற்றப்படும் சிறு பெண் குழந்தைகள் சிந்தனையில் தாங்கள் போதுமான அளவு அக்கறையுடன் கவனிக்கப்படவில்லை என்ற எண்ணம் பரவலாக இருந்து வருவதை எண்ணினேன். இவையாவும் ஆண் பெண் சமத்துவத்தையும், பெண் சுதந்திரத்தையும் அளித்து விடவில்லை என்பதை அவர்களது புரிதல் உணர்த்தியது.

``எந்த அரசும் பெண்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்றால் பெண்களே ஆட்சி செய்யும்போது பெண்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று நம்பலாமா?''

ஆம் என்றார்கள் அனைத்து மாணவிகளும்! சிறுவர்கள் வழக்கம்போல் அமைதி காத்தனர்.

``பெண்களே ஆட்சி செய்ய வேண்டுமென்றால் பெண்களுக்கான தனி அரசியல் கட்சி வேண்டுமே? பெண்கள் தங்களுக்கென ஒரு அரசியல் கட்சியைத் துவங்கினால் எப்படியிருக்கும்?''

விளையாட்டாய்க் கேட்டேன் அவர்களிடம்.

``ரொம்ப சூப்பரா இருக்கும்!'' சந்தோஷத்துடன் ஆரவாரத்துடன் சிறுமிகள் கோஷமிட்டனர்.

``அடேயம்மா'' என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன்.

``என்ன பசங்களா, எல்லோரும் மௌனமா இருக்கீங்க? பெண்கள் அரசியல் கட்சியைத் துவக்கினால் எப்படியிருக்கும் என்று நீங்கள் சொல்லவில்லையே?''

அவர்கள் விடாது மௌனம் காக்கவே, சிவப்புக் கலர் சட்டை அணிந்திருந்த பையனை எழுப்பிவிட்டேன். சிவப்பு முற்போகின் வண்ணமல்லவா? அவன் எழுந்தான். அவசரமான குரலில்,

``நாடு நாசமாப்பூடும்'' என்றான். எல்லா சிறுவர்களும் கைதட்டினார்கள், அவனுடை வெளிப்பாட்டை ஆதரித்து.

நாசமாய்ப்போகிற அந்த எண்ணத்தை ஆதரித்து விளக்கம் கேட்க விரும்பாமலும், சிறிய குழந்தைகளை மேலும் கேள்விகள் அல்லது விளக்கங்கள் கேட்டு வற்புறுத்த வேண்டாம் என்பதினாலும் மாணவிகளை நோக்கி கேள்விகளை எறிந்தேன்.

``ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். பெண்கள் தனி அரசியல் கட்சி துவங்கினால் எல்லாப் பெண்களும் அதில் உறுப்பினர்கள் ஆவார்களா?''

``ஓ. நிச்சயமா டீச்சர்'' கோரஸ்.

``சரி, உங்களுக்குப் போதிய அதிகாரம் கிடைக்கவில்லை என்பதற்காகத்தானே தனி அரசியல் கட்சி துவக்குகிறீர்கள், வாருங்கள் உங்களுக்கு அதிகாரம் தருகின்றோம் என்று இப்போதிருக்கும் அரசியல் கட்சிகள் அழைத்தால் போய்விடுவீர்களா?''

``சத்தியமாக மாட்டோம்.''

இவர்கள் என்ன சிறுமிகளா அல்லது அரசியல் மாணவிகளா என்று எனக்கு நம்புவதற்குக் கடினமாக இருந்தது. உடனிருந்த கலையரசன் சற்று பதற்றத்துடன் ``அம்மா கேட்கிறாங்களேன்னுதானே நீங்க இப்படி பதில் சொல்றீங்க? உண்மையைச் சொல்லுங்க'' என்றார்.

``உண்மையைத்தான் சொல்கிறோம்.''

``அப்போ பெண்களுக்கான அரசியல் கட்சியைத் துவக்கிடலாம்னு சொல்லுங்க'' என்று ஏமாற்றத்துடன் ஆசிரியர் ஒருவர் கூறினார்.

``சார், பெண்களுக்கான அரசியல் கட்சியை ஆண்கள் துவக்க முடியாது.'' அவர்களில் ஒரு பெண் எழுந்து உரத்த குரலில் கூறினாள்.

ஆசிரியர் கப்சிப்.

``சரி, பெண்கள் கட்சியில் ஆண்கள் இருக்கலாமா?'' என்னுடைய கேள்விக்கு முதலில் முடியாது என்றும் பிறகு நல்ல ஆண்களை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் பதில் வந்ததும் அவர்கள் பதிலில் ஆண்களையும் அரவணைக்கும் தாய்க்குணம் வெளிப்பட்டதால்,

`என்ன பசங்களா, பெண்கள் தங்கள் கட்சியைத் துவக்கி விட்டார்கள். உறுப்பினராக சேர்வதற்குத் தயாரா?'' என்று அவர்களை நோக்கி ஆவலுடன் கேட்டேன்.

``செத்தாலும் அந்தக் கட்சியில் நாங்கள் சேரமாட்டோம்.'' இப்படி சிறுவர்கள் உறுதியுடன் கூறினார்கள்.

சமூக ஏற்றத்தாழ்வுகளோடு ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகளும் விஷமூட்டிய வித்துக்களின் முளைகள் போல் வீரியத்துடன் வளர்ந்து வந்திருக்கின்றன என்றெண்ணி வியப்பும் வருத்தமுங் கொள்ளாதிருக்க இயலவில்லை என்னால்.

பதினைந்து வயதிற்குற்பட்ட சிறுமி - சிறுவர்களிடையே இப்படிப்பட்ட எண்ணங்கள் என்றால் பெரிய விருட்சமாகி அனுபவத்தில் கிளைத்த வேர்களில் எத்தனை உரமிருக்கும்?

இப்பள்ளிச் சிறுமிகளை விதிவிலக்காக எண்ண வேண்டுமோ என்ற குழப்பத்தில் அங்கிருந்து விடைபெற்றேன்.

உடன் வந்திருந்த சில நண்பர்களும் இதை விவாதப் பொருளாக்கிக் கொண்டு காஞ்சிபுரம் நோக்கிப் பயணம் மேற்கொண்ட பொழுது கலைநேசன் அவர்கள் ``தூசி மாமண்டூர் என்ற இன்னொரு கிராமத்தில் இதே போல் மாணவர்களுக்கான கோடை முகாம் நடைபெறுகிறது. அங்குள்ள மாணவ மாணவிகளையும் உற்சாகப்படுத்துங்கள்'' என்றுகேட்டுக் கொண்டார். அவர் வேண்டுகோளை ஏற்று தூசி மாமண்டூருக்குச் சென்ற போது குழப்பமில்லாது, எதைப் பேசுகிறோம் என்று அறிந்து, வெம்பாக்கம் பள்ளி மாணவருக்குப் போன்றே கேள்விகளை ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம்! அங்கேயும் இதே போன்று பதில்களும் எதிர்வினைகளும்! இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பாடல்கள் சென்னையில் `ஹிட்' என்றால் கன்னியாகுமரியினும் `ஹிட்' என்பது போல ஒரே மாதிரியான பதில்கள் ஆச்சரிய மூட்டின. அதே சமயத்தில் `பெண்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி ஆண்கள் மனதில் அச்சமாகப் பதிவாகிறதே இது ஏன்?' என்ற கேள்வியும் எழுந்தது. ஆண் பெண் சமத்துவமென்பதெல்லாம் கண்துடைப்புத்தானா? ஆண், பெண் இருவர் மத்தியிலும் வித்தியாசமான அச்சங்கள்!!

பெண்களுக்குத் தனி இயக்கம் எனப் பெண் குரல்கள் பல பதிவாகி இருந்தாலும் பெண்களுக்கான தனி அரசியல் கட்சி என்பது இன்னும் வரலாற்றில் அழுத்தமாகப் பதிவாகவில்லை என்பது இந்திய வரலாற்றையும் உலக வரலாற்றையும் ஊன்றிப் பயிலும் எவருக்கும் தெரியும். ஆனால் வரலாறுகளை ஆழமாகப் பயிலாத மாணவிகள் மத்தியில் சமத்துவத்தை முன்மொழியும் பெண் அதிகாரம் என்பது மிக ஆழமாகப் பதிவாகியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

1990ல் நான் மாவட்ட ஆட்சியராகப் பணி புரிந்தேன். படிக்காத பாமரர்கள் மத்தியில், ஏன் கல்லூரிகளில் பயின்றவர்கள் மத்தியிலும் கூட இந்திய ஆட்சிப்பணி (மி.கி.ஷி) என்றால் கலெக்டர் உத்தியோகம் என்றே புரிந்து கொள்கின்றனர். அது ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அதிகாரப் பாதையில் 8 முதல் 10ம் வருடத்தில் வகிக்கப்படும் ஒரு ஜூனியர் பதவி என்பது தெரிவதில்லை. ஏறக்குறைய 28 வருடம் பணியாற்றிய என்னிடம், நீங்கள் கலெக்டராக வர மாட்டீர்களா என்று ஏக்கத்துடன் ஒருசிலர் கேட்பார்கள். `நான் அப்பதவியை வகித்து முடித்து விட்டேன். இனி கலெக்டராக வருவது சாத்தியமில்லை, பதவிஇறக்கம் செய்தாலொழிய' என்று விளக்கும் போது வியப்படைவார்கள். இப்படி 1990ல் நான் கலெக்டராக பணியாற்றிய போது பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களையும் எனது அன்புத் தோழியும் தற்போது பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் பாரதியையும் மகளிர்தின விழாவில் பேசும்படி அழைத்திருந்தேன். சுயஉதவிக் குழுக்கள் பெண்களிடையே அவ்வளவு பிரபலம் அடையாத காலம் அது. காமராஜர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிராம மகளிர் மன்றங்கள் நலிவடைந்து தேய்ந்திருந்த காலமும் கூட. பெண்கள் ஊறுகாய்கள் தயாரித்தும், பிளாஸ்டிக் ஒயர் கூடைகள் பின்னியும், வற்றல்கள் தயாரித்தும், கறவை மாடுகள் வளர்த்தும் மகளிர் மன்றங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். பெண்ணியக் கருத்துகளைத் தொடர்ந்து தனது புதினங்கள் மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் பரப்பி வந்த ராஜம் கிருஷ்ணன் அவர்கள் இக்கருத்துக்களை பெண்கள் மத்தியில் பேசமுற்படும்போது பரவசமடைவதையும், அவசரம் அவசரமாகவும் ஆணித்தரமாகவும் கைகளை வீசிப் பேசுவதையும் கவனித்து நானும் பரவசமடைந்தேன். ஏனெனில் எனக்குள்ளும் அவரைப் போன்றே கனல் எரிந்து கொண்டிருந்தது.

குடும்பச்சூழலில் பெண் எப்படி சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறாள் என்பதையும் வையகம் புகழும் திருக்குறள் கூட, `கற்புப் பெண்டிர்' `பெய் என்றால் பெய்யும் மழை' என்று சொல்கிறதே என்று அங்கலாய்த்ததும் இன்றும் என் கண் முன்னால் பசுமையாக இருக்கின்றது. `அவரை நிறுத்த முடியாதோ, விடாமல் பெய்யும் மழை போல் பொழிந்து தள்ளுகிறாரே, என்ன ஒரு சமூக அக்கறை' என வியந்து கொள்வோம் நானும் பாரதியும். நானும் பாரதியும் ஏறக்குறைய ஒத்த வயதினர் என்பதால் அவரை ஆதர்சமாகக் கொண்டு அவரின் முகத்திற்கப்பால் நின்று அவரைப் புகழ்ந்து கொள்வோம். அதேபோல அன்று, பாரதி கோவில்பட்டியில் ஆற்றிய உரையும் எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கின்றது. ``பெண்கள் வயதிற்கு வந்து விட்டால், அவள் தலையில் ஒரு கூடைப் பூவைச் சுற்றி, திரட்டு என்ற பெயரில் ஊருக்கெல்லாம் எங்கள் வீட்டுப் பெண் திருமணத்திற்குத் தயார் என்று அறிவிக்கிறோம் நாம். ஒரு பெண்ணுக்குத் திருமணம் தவிர வேறு முக்கியமான விஷயமேயில்லையா?'' இப்படி ஒரு கொக்கியைப் போட்டுவிட்டு என்னைப் பெருமிதமாகப் பார்த்தார். நான் பேசும்போது, ``முற்போக்கு இயக்கங்கள் என்று கூறிக்கொள்ளும் சில அரசியல் கட்சிகள்கூட, பெண்களைக் கட்சிக்குக் கலர் சேர்ப்பவர்களாக காண்கிறார்களே, மகளிரணி என்ற கொட்டடியில் அடைக்கின்றனரே, ஜனநாயக மாதர்சங்கமும் இந்தக் கொட்டடிபோல்தான் இயங்குகிறது'' என்று நேரடி அரசியலுக்கு வந்து விட்டேன். உடனே ராஜம் கிருஷ்ணன் அவர்களும் `இந்த முற்போக்குக் கட்சிகள் மற்றவர்களை ஒப்பிடும்போது பரவாயில்லை என்று கூறத் தோன்றினாலும், அவர்களையும் பெண்கள் விஷயத்தில் நம்புவதற்கில்லை, நீ சொல்வது உண்மைதான்' என்று கூட்டம் முடிந்தவுடன் பேசினார். மகளிர் மன்றங்களுக்கு நிலம் ஒதுக்கி மாட்டுத்தீவனம் வளர்க்கவும், பழமரங்கள் நடவும் நான் எடுத்த முயற்சிகளை வெகுவாகப் பாராட்டினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு நாங்கள் மூவரும் அவரின் புகழ் பெற்ற புதினமாகிய `கரிப்பு மணிகள்' எழுதப்பட்ட உப்பளக்காட்டுக்குச் சென்றோம். அங்கே நான் அவரிடம் பதிவு செய்தேன். ``ஏன் முற்போக்கு சக்திகள் மாவட்ட அளவில் மாவட்டச் செயலாளர் பதவியை ஒரு பெண்ணுக்குத் தர இயலவில்லை!'' என்று. அப்போதைய என் கேள்விக்கு, எல்லா இடங்களிலும் `ஆணாதிக்கம்' எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார் அவர்.

என் சிறு வயதில் நான் மிகவும் ரசித்துப் படித்த ராஜம் கிருஷ்ணன், சூடாமணி ஆகியோரும் சரி, பின்னால் நான் வாசித்த அம்பையும் சரி, மாணவ மாணவிகளுடன் என்னுடைய கேள்விகளின் பின்னணியாக இருந்தனர் என்றால் அது மிகையாகாது. பல காலமாய் பல்வேறு தளங்களிலும் களங்களிலும் வெவ்வேறு விதமாக வெளிப்பட்டு வந்த விஷயம் தற்போது நேரடியாக, பெண்களுக்கு ஏன் தனி அரசியல் கட்சி கூடாது என்ற கேள்வியாக, இயல்பாக விழுந்து விட்டது என்பதை விளக்கத்தான் இவ்வளவு பீடிகையும்!

அரசியல் என்றாலே அது பெண்களுக்கான தளம் இல்லை என்ற பரவலான கருத்து இன்னும் முழுவதுமாகக் குப்பைத் தொட்டிக்கு விடவில்லை. அரசியல் என்பது சாமான் மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் இன்னும் சகித்துக் கொள்ள முடியாத துர்நாற்றமாகவேக் கருதப்பட்டு வருகிறது. அதிகார போதையால் நம்பிக்கை, நாணயம், அன்பு, உறவு ஆகியவையும் இன்ன பிறவும் கைவிடப்பட்ட சாக்கடை போல் அரசியல் இருப்பதும் ஒரு காரணம் என்று கூறிக் கொண்டாலும், பெண்கள் அரசியல் அதிகாரம் பெறுவதை சமுதாயம் விரும்பவில்லை என்பதும் ஒரு காரணம். நமது சட்டமன்றத்தில் வெறும் பதின்மூன்று சதவிகிதம் மட்டுமே பெண்கள் இருப்பதும், நாடாளுமன்றத்தில் வெறும் பத்து சதவிதமாகக் குறைந்திருப்பதும், நேரடித் தேர்தலற்ற மேல்சபையில் பெண்களது எண்ணிக்கை பதினொரு சதவிகிதத்தை இன்னும் தாண்டவில்லை என்பதும் நமது மேற்படி அனுமானத்தை விளக்கப் போதுமானதாக உள்ளன. பெண்களுக்கு முப்பத்து மூன்று சதவிகித ஒதுக்கீடு என்பது அமலுக்கு வந்தால் பெண் அதிகாரம் பெற்று விடுவாளா? இந்த ஒற்றைத் தீர்வு மட்டும்தான் உள்ளதா? வேறு வழிகளும் உள்ளனவா? இக்கேள்விகளுக்கு அடுத்த இதழில் விடையளிக்க முயற்சி செய்வோம். l

தொடரும்

Current Issue
01-11-2008
Previous Issue
01-10-2008
   
Please give your valuable feedback on this article/programme
( Examples for tamil font
ammaa = அம்மா, kumutham = குமுதம், vaNakkam = வணக்கம், thamiz = தமிழ் )
Tamil font help    தமிழ் English
Click here for sending feedback to a friend
Chennai City Information
 Cinema Theaters
Inox
Satyam Theater
Mayajaal
Abirami Mega Mall
 Airlines
Indian Airlines Deccan Airline
Jet Airways Paramount
Kingfisher Spicejet
Jetlite indigo
 Hotels
The Residency
Taj
Park Sheraton
LE Royal Meridien
 Hospital
Apollo Health Care
Malar Billroth
Miot Dr Agarwal
Hindu Mission Sooriya
<< Back to Homepage
 

About us | Register | E-Shopping | Subscribtion Enquiry |Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2007 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion .