|
பஞ்சு இட்லி!
இட்லிக்கு அரைக்கும்போது உளுந்துக்குப் பதில் வெள்ளைப் பூசணியைச் சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.
நிறைய வெண்ணெய்க்கு...
மிக்ஸியில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கும்போது முதலில் கொஞ்ச நேரம் ஓட விட்டு,பின் 5 நிமிடங்கள் கழித்து மீண்டும் மிக்ஸியை ஓட விட்டால் வெண்ணெய் நன்றாகத் திரண்டு வரும்.
- ஆர். பிருந்தா இரமணி, மதுரை.
உதிராத காரம்!
எந்த சிப்ஸ் செய்வதானாலும் காரம் பிசிறும்போது நெய் அல்லது டால்டாவைக் காரத்தில் கலந்து விட்டு பிசிறினால் சிப்ஸ் நெய்யில் வறுத்ததுபோல வாசனையாகவும், காரம் உதிராமலும் சமமாக கலந்திருக்கும்.
- கீதா ஹரிஹரன், கொல்லம்.
சாஃப்ட் புட்டு!
புட்டு செய்யும்போது, அரிசி மாவில் சிறிது உப்பும், தண்ணீரும் கலந்து பிசைந்த பிறகு மிக்ஸியில் சுற்று சுற்றி விட்டுப் பிறகு செய்தால் புட்டு மென்மையாகவும், மிருது வாகவும் இருக்கும்.
- பிந்து, சென்னை.
வெங்காய சீக்ரெட்
சில ரெசிபிகளுக்கு வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்க வேண்டும். சிலவற்றுக்கு நிறம் மாறாமல் வதக்க வேண்டி இருக்கும். பொன்னிறமாக வதக்க, வெங்காயத்துடன் உப்புத் தூள் சேர்த்தால் போதும். நிறம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால், சிறிது பால் ஊற்றி வதக்கினால், வெங்காயமும் வேகும்; நிறமும் மாறாது.
- ஹம்சத் தவ்ஹா, கீழக்கரை.
முத்துக்களை பாதுகாக்க
காற்றுப்புக முடியாத டப்பாவிலோ லாக்கரிலோ முத்துக்களை வைக்கவே கூடாது. நல்ல காற்றோட்டமுள்ள வகையில்தான் வைக்க வேண்டும்.
வெயில், வறண்ட காற்று முத்துக்களுக்கு ஆகவே ஆகாது.
வாசனை திரவியங்கள்,அழகு சாதனப் பொருட்கள் போன்றவை முத்துக்களுக்குக் கெடுதலையே விளைவிக்கும்.
கீதா ஹரிஹரன், கொல்லம்.
 பட்டுப்புடவை டிப்ஸ்
பட்டுதானா என்று கண்டுபிடிக்க ஒரு நூலை இழுத்து ஈரம் தொட்டு சுண்டினால் அறுந்து போதாது. செயற்கை பட்டு அறுந்துவிடும்.
இழையை நெருப்பில் காட்டினால் ரோமம் பொசுங்கும் வாடை வரும்.
புடவையின் மேல் பகுதி சொர சொரப்பாக இருக்கும். டாலடிக்கும்.
ஒரிஜினல் ஜரிகையை நெருப்பில் காட்டினால் உரோமம் கருகும் வாசம் வரும். மெதுவாக எரியும். செயற்கை பட்டு பாலிஸ்டர் இழைகள் எரிந்து கையோடு ஒட்டிக் கொள்ளும்.
எச். சீதாலட்சுமி, கொல்லம்.
|