|
போனில் யாரிடமோ தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தார்,சுவாமி வம்பானந்தா.
‘‘எதுவா இருந்தாலும் நேர்ல வாங்க... போன்ல வேண்டாம்... உங்களுக்காக கண்டிப்பா பண்ணுறேன்...’’என்று சொன்னபடியே போனை கட் பண்ணினார்.
‘‘போன்ல யார் சுவாமி...?’’ சிஷ்யை கேட்டார்.
‘‘அதுவா... ஜனவரியில மேலவைத் தேர்தல் வந்திடும் போலிருக்கு... அதுக்கான வேலையில் தேர்தல் கமிஷன் தீவிரமா இருக்கு... கவர்னர் பன்னிரண்டு பேரை நியமிக்கலாம்... அதான் யாரை பிடிச்சா கிடைக்கும்னு தொழிலதிபர் போன்ல கேட்கிறார்.அதான் நேர்ல வரச் சொன்னேன்...’’ சுவாமி வம்பானந்தா சொன்னார்.
‘‘நியமன உறுப்பினருக்கு என்ன தகுதி இருக்கணும்...?’’
‘‘தொழிலதிபர்களிடம் உள்ள தகுதி என்ன... அவர்களிடம் இருக்கும் விட்டமின் ‘ப’தான்.தேர்தல் பற்றிய அறிவிப்பே வரல...அதுக்குள்ள ‘எழுபத்தைந்து லகரம் வரையில் கொடுக்கத் தயாரா இருக்கோம்’னு ஒரு கூட்டம் ஆள் பிடிக்க அலையுதாம்...’’
‘‘அம்மாடி...’’
‘‘மேலவைத் தேர்தல் நடத்துறது தொடர்பா தேர்தல் கமிஷன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திச்சு... அந்தக் கூட்டத்துல பகுஜன் சமாஜ் கட்சி இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வச்சிருக்காங்க... அடுத்து பேசிய பி.ஜே.பி.யைச் சேர்ந்த தமிழிசை,உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு முப்பத்து மூன்று சதவிகிதம் ஒதுக்கீடு இ ருக்கு... அந்த ஒதுக்கீட்டை பெண்களுக்கு மேலவையில் தரணும் என்று கேட்டிருக்காங்க...அதோடு ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்தியிருக்காங்க... அவரைத் தொடர்ந்து பேசிய பலரும் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருக்காங்க...’’
‘‘தேர்தல் கமிஷன் என்ன சொன்னாங்க...?’’
‘‘மேலவையில் இடஒதுக்கீடு இல்லைன்னு சொல்லியிருக்காங்க... லோக்சபாவில் மட்டும்தான் இடஒதுக்கீடு உண்டு.ராஜ்யசபாவில் கிடையாது என்று சுட்டிக்காட்டி அந்தக் கோரிக்கையை ரூல்ட் அவுட் பண்ணிட்டாங்களாம்...’’
‘‘அடடா...’’
‘‘ஆசிரியர்கள் ஓட்டுப் பிரச்னை தொடர்பா பேச்சு வந்திருக்கு... ஆசிரியர் படிப்பு படித்து ஆறு வருடம் முடிந்திருக்க வேண்டும். குறைந்தது மூன்று வருடமாவது பணியாற்றியிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஓட்டுப் போட முடியும் என்று தேர்தல் கமிஷன் சொல்லியிருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. முன்பை போல ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் யாருக்கும் வேலை கிடைப்பதில்லை. அப்படியிருக்க, இந்த நிபந்தனைகள் எதற்கு என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் தேர்தல் கமிஷன் அசைந்து கொடுக்கவில்லையாம்...’’
‘‘எல்லா ஆசிரியரும் தேர்தல்ல வாக்களிக்க முடியாதா?’’
‘‘அதேபோல பட்டதாரிகளும் அரசு கல்லூரிகள், அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பயின்றவர்கள் மட்டுமே ஓட்டுப் போட முடியுமாம்!’’
‘‘இதுக்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்கலையா...?’’
‘‘மேலவையே வேண்டாம் என்று அ.தி.மு.க.வும், கம்யூனிஸ்டுகளும் சொல்லிட்டு வர்றாங்க... அவங்க தேர்தலை தள்ளி வைக்க என்னனென்ன சொல்ல முடியுமோ அதையெல்லாம் தேடிப் பிடிச்சி சொல்லியிருக்காங்க...’’
‘‘அப்படியென்ன சொன்னாங்க...?’’
‘‘2001-ம் ஆண்டு கணக்கெடுப்பை வச்சு வாக்காளர் பட்டியலைத் தயார் பண்ணியிருக்காங்க... அதை சுட்டிக் காண்பிச்சு, இன்னும் ஓராண்டில் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு முடியப்போகுது. அதுக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் தயாரிக்கலாமே என்று அ.தி.மு.க.வினர் சொல்லியிருக்காங்க...’’
‘‘கம்யூனிஸ்டுகளின் வாதம் என்னவோ....’’
‘‘இருபத்தைந்து வருஷமா மேலவை இல்லாமல் இருந்திருக்கு.... இதனால எதுவும் நடக்காம இல்ல...இன்னும் ஒரு வருஷம் லேட்டானாலும் ஒண்ணும் கெட்டுப்போயிடாது. அப்படியிருக்க, ஏன் அவசரம் காட்டுறீங்க...மக்கள்தொகை அடிப்படையில் மாவட்டங்களைப் பிரிச்சிருக்கீங்க... சில மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை இருக்கு... சில மாவட்டங்களில் குறைவா இருக்கு... இன்னும் ஆறு நாளில் வாக்காளர் பட்டியல் தயாராகப் போறதா பத்திரிகையில் செய்தி வெளிவந்திருக்கு... ‘கடவுளே வந் தாலும் ஆறு நாளில் வாக்காளர் பட்டியல் தயார் செய்ய முடியாது’ன்னு சொல்லியிருக்கார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன்.’’
‘‘அவர் வாயில் இருந்தே கடவுள் என்ற வார்த்தை வந்திருக்கே...’’
‘‘அவர் அருகில் இருந்த தமிழிசை இதைச் சுட்டிக்காட்ட, நீங்கள் பக்கத் தில் இருந்ததால் கடவுள் என்னையும் தொற்றிக் கொண்டார் என்று அவர் சொல்ல, எல்லோரும் சிரித்து விட்டார்களாம்.’’
‘‘ஆறு நாளில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பற்றி தேர்தல் கமிஷன் என்ன பதில் சொன்னதாம்...?’’
‘‘அந்தத் தகவல் தவறானது என்று சொல்லியிருக்காங்க... அடுத்து கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானது, கவர்னரின் நியமன உறுப்பினர்கள். கவர்னரே நியமிக்கப்படுபவர். அவர் பன்னிரண்டு பேரை நியமிப்பதா? ராஜ்யசபாவில் கூட இந்த அளவுக்கு நியமன உறுப்பினர்கள் இல்லை. மேலவையில் எதற்கு இத்தனை பேர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.’’
‘‘நியாயமான கேள்விதானே...’’
‘‘பெரும்பாலான கோரிக்கைகளை சட்டத்தைக் காண்பிச்சு தேர்தல் கமிஷன் மறுத்துவிட்டதில், அனைத்துக் கட்சியினருக்கும் கொஞ்சம் வருத்தம்தான். கடைசியாக இந்த ஒரு கூட்டத்தோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து கருத்துக் கேட்கணும் என்று அனைவரும் ஒட்டுமொத்தமாக கோரிக்கை வைத்துள்ளனர்.’’
‘‘அதையாவது நிறைவேற்றுவார்களா?’’
‘‘அது தெரியல... ஆனால், தேர்தல் கமிஷனின் வேகத்தைப் பார்க்கும்போது, டிசம்பர் அல்லது ஜனவரியில் தேர்தல் நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.’’
‘‘அப்ப அடுத்தடுத்து தேர்தல்தான்...’’
‘‘தி.மு.க.வில் நடந்த எம்.பி.க்கள் கூட்டம், அமைச்சரவைக் கூட்டம், கலெக்டர்ஸ், போலீஸ் அதிகாரிகள் மாநாடு இதில் எல்லாம் சட்டமன்றத் தேர்தல்தான் மையப்பொருளாக இருந்ததாம்... கலெக்டர்கள் மாநாடு முடிந்ததும், அமைச்சர்களிடம் முதல்வர், ‘கட்சியில் கோஷ்டிப் பூசல் இருக்கக்கூடாது. உங்களை விட உங்கள் பி.ஏ.க்கள் அள வுக்கதிகமாக ஊழல் செய்வதாக உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியிருக்கு... இதுவரை நடந்தது நடந்ததாக இருக்கட்டும். தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதம்தான் இருக்கிறது. இனிமேலாவது எந்தத் தப்புக்கும் இடம் கொடுக்காமல் வேலை செய்யுங்கள்’ என்று கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார்.’’
‘‘அழகிரி கூட முதல்வரைப் பார்த்தாராமே...’’
‘‘எம்.பி.க்கள் கூட்டம் முடிந்ததும் முதல்வரை வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கார்.அப்போது தென் மாவட்டங்களில் உள்ள அறுபது தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலைக் கொடுத்ததாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.’’
‘‘ரொம்ப ஸ்பீடா இருக்காரே...’’
‘‘அதான் அழகிரி... முதல்வரும் மாவட்டவாரியா நேர்காணல் நடத்தப் போறார். அக்டோபர் 14-ம் தேதி வரை நேர்காணல் நடக்கப் போகுது. இந்த நேர்காணலின்போதே வேட்பாளர்கள் யார் யாருன்னு முடிவு பண்ணிடுவாங்கன்னு கட்சி வட்டாரத்துல பேச்சு இருக்கு...’’
‘‘வழக்கமா தேர்தல் வேலைகள்ல அ.தி.மு.க.தான் இவ்வளவு வேகமா இருக்கும்... தி.மு.க. அதைவிட வேகமா இருக்குதே...’’
‘‘அவங்களும் ஒன்றிய அளவுல செயல் வீரர்கள் கூட்டம் நடத்தச் சொல்லியிருக்காங்களாம்...அங்கேயே புத்தக வடிவில்,ஒவ்வொரு பூத்துக்கும் யார்யாரை நியமிப்பது என்று முடிவு செய்கிறார்களாம். அவர்களின் போட்டோ, முகவரி ஆகியவற்றோடு பூத்தில் எவ்வளவு ஓட்டு, ஆண்,பெண் வாக்காளர்கள் எவ்வளவு என்று அந்தப் புத் தகத்தில் குறிக்கச் சொல்கிறார்களாம்...’’
‘‘இப்பவே பூத் கமிட்டி யார் யார் என்று தெரிந்தால், எதிர்க்கட்சிகள் விலை பேச வசதியாகிவிடுமே...’’
‘‘அ.தி.மு.க.வில் சிலர் அப்படித்தான் சொல்லி புலம்புறாங்க... இப்பவே வேலையைப் பகிர்ந்து கொடுத்துட்டா, வாக்காளர்களைக் கவரும் வேலை நடக்குமே என்று மேலிடத் தலைவர்கள் சொல்றாங்க...’’
‘‘அ.தி.மு.க.வில் உள்ள மருத்துவருக்கு சமீபகாலமாக முக்கியத்துவம் கு றைக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அவருடைய ஆதரவாளரான, அணித் தலைவரான உதயமானவர், தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்ய முன் வந்தாராம்...இந்த விவகாரம் தலைமைக்குத் தெரிய வர ரகசியமாக விசாரணை நடந்து வருகிறதாம்...’’ என்று சொன்ன வம்பானந்தா பூஜை அறைக்குள் புகுந்தார். சென்னை மாநகர போலீஸில் உள்ள உயர் அதிகாரி ஒருவரிடம் முருகப் பெருமானின் பெயர் கொண்ட இன்ஸ்பெக்டர் ஒருவர் நீண்ட நாளாக பணியாற்றி வருகிறாராம். அந்தப் பெரிய அதிகாரி எங்கே சென்றாலும், அவருடன் இவரும் பயணிப்பார்.சென்னை மாநகரத்தின் பெரிய அதிகாரியாக வந்ததும், இவரும் உடன் வந்துள்ளார். இடமாற்றத்தில் இருந்து வீடு ஒதுக்குவது வரையில் எல்லாவற்றிலும் இவருடைய தலையீடு அதிகமாக இருந்ததாம். இதை எதிர்த்து பல அதிகாரிகளை இவர் முடக்கி வை த்தாராம். சமீபத்தில் எஸ்.எம்.எஸ். மூலம் புகார் செய்யலாம் என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்தபோது,அதனை கவனிக்கும் பொறுப்பை இவர் எடுத்துக் கொண்டாராம்.இதன் மூலம் நகரின் அத்தனை ஸ்டேஜனுக்கும் இவரே போன் செய்து இன்ஸ்பெக்டர்களை மிரட்டி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் வந்த எஸ்.எம்.எஸ். தகவலை வைத்து இவர் செய்த ரெய்டில் முன்னணி நடிகை ஒருவர் சிக்கினாராம். சத்தமே இல்லாமல் அந்த நடிகையை விடுவித்த அவர்,அதற்கு உபகாரமாக பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டாராம். ஆனால், அதோடு விடவில்லையாம்.தொடர்ந்து நடிகையை ஜூட்டிங்கில் இருக்கும் போதெல்லாம் அழைத்து தொந்தரவு தந்தாராம். பொறுத்துப் பார்த்த நடிகை,பெரிய இடத்து தயாரிப்பாளரிடம் இதுபற்றிச் சொல்ல, இன்ஸ்பெக்டரை அங்கிருந்து உளவுத்துறைக்கு மாற்றிவிட்டார்களாம். உடனேயே அவர் விடுப்பில் சென்றுவிட்டார். ‘சீக்கிரமே சென்னை நகருக்கு அதே செல்வாக்கோடு வருவேன்’என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாராம்.
நெல்லை அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் காளியப்பன் தி.மு.க. எம்.எல்.ஏ. மாலைராஜாவால் தாக்கப்பட்டார். இதைத் கண்டித்து கடந்த வாரம் அவருடைய நண்பரும் அம்பேத்கர் பேரவை நிறுவனருமான சுகுமாரன் தலைமையில் நாகர்கோயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதையடுத்து, நாகர்கோவில் அருகில் உள்ள இறைச்சகுளத்தில் உள்ள சுகுமாரனின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு அடுத்த வீடு, துணைவேந்தரின் வீடு. இதனால் பயந்து போன அவரை, ஜெயா டி.வி.யில் இருந்து அழைத்துப் பேசி ஜெயலலிதாவைச் சந்திக்க வைத்தார்களாம். துணை வேந்தரின் பதவிக்காலம் வரும் 17-ம் தேதியுடன் முடிகிறதாம்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டவர்களுக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் 30-ம் தேதி உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் இலங்கை சென்றுள்ளார். அங்கு தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்கிறார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று நிரு பமாராவ் சென்று திரும்பியதும்,மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை செல்வார் என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கிறது. |