|
(உத்திராடம் 2ம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
குடும்பம் : குடும்பச் சூழ்நிலை திருப்தி தரும். திருமண முயற்சிகள் கைகூடும். பல மாதங்களாக மனதில் கவலை அளித்து வந்த பிரச்சினை ஒன்று நல்லபடி தீர்வதால் மனதில் அமைதி பிறக்கும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின் சொந்த வீடு அமையும் பாக்கியம் சிலருக்கு ஏற்படும். கணவன்மனைவியரிடையே ஒற்றுமை நிலவும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவது மனதிற்குப் பெருமையும், அமைதியையும் தரும். நீதிமன்ற வழக்குகள், சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஆகியவை நல்லபடி தீரும். குடும்பத்தில் பல சுபநிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம். சுபச் செலவுகள் அதிகமாக இருப்பினும் வருமானம் நல்லபடி இருப்பதால் சிரமம் இராது. நோய், உடல் உபாதை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுவந்த தந்தையின் உடல்நலனில் அபிவிருத்தி காணலாம்.
உத்தியோகம் : கிரகநிலைகள் மிகவும் அனுகூலமாக அமைந்திருப்பதால் அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு, சக ஊழியர்களின் ஒத்துழைப்பு, சிறு சம்பள உயர்வு ஆகியவை மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும். கொடுத்தாலும் கடும் உழைப்பை ஏற்படுத்துவார் சனிபகவான். ஆதலால், கடமையில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களினால் நன்மை ஏற்படினும், அதிக அலைச்சல் உடற்சோர்வை ஏற்படுத்தக்கூடும். சிலருக்கு இடமாற்றமும், நிறுவன மாற்றமும், அதனால் பல நன்மைகளும் ஏற்படும். உலகப் பொருளாதார நெருக்கடியினால் வெளிநாடுகளில் வேலையை இழந்து சிரமப்படும் அன்பர்களுக்கு இப்போது எளிதில் நல்ல வேலை கிடைக்கும்.
தொழில், வியாபாரம் : கிரகநிலைகள் மிகவும் உதவிகரமாகச் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் ஆகியவற்றில் இத்தமிழ்ப் புத்தாண்டில் சிறந்த முன்னேற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். நியாயமற்ற போட்டிகள் இப்போது சற்று குறையும். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். புதிய வியாபார துறைகளிலும், முயற்சிகளிலும் இப்போது ஈடுபடலாம். ஏற்றுமதி, இறக்குமதித் துறையினருக்கு லாபகரமான ஆண்டு இது எனக் கிரகநிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அரசாங்க அதிகாரிகளின் ஆதரவும், உதவியும் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும் உள்ளது. அதனால் தொழில் அபிவிருத்திக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். நிதிநிறுவனங்கள் ஒத்துழைக்கும்.
கலைத்துறையினர் : இத்துறையினருக்கு ஆதிக்கத்தில் உள்ள கிரகங்கள் சுபபலம் பெற்றுச் சஞ்சரிப்பதால் இந்த ஆண்டு அதிர்ஷ்டகரமான ஆண்டு என உறுதியாகச் சொல்லலாம். வாய்ப்புகளும், வருமானமும் குறைவின்றிக் கிடைக்கும். உங்கள் துறைக்கே இயல்பான போட்டிகள், பொறாமைகள் நீங்கும். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோர் புதிய தயாரிப்புகளில் தைரியமாக ஈடுபடலாம். புதிய வாகன யோகம், சொந்த வீடு வாங்கும் பாக்கியம் உள்ளன. இந்த ஆண்டு நடைபெறும் தசா, புக்திகள் அடிப்படையில் இந்தப் பாக்கியங்கள் கிடைக்கும்.
அரசியல்துறையினர் : சென்ற இரண்டாண்டுகளுக்கும் மேலாக கட்சியில் மனநிம்மதியின்றித் தவித்துவந்த உங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது இப்போது. கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக உள்ளது. தசா, புக்திகளுக்கேற்ப அரசாங்கப் பதவி ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதைக் கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஒரு சிலருக்கு வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும் உள்ளது. சிலர் தற்போதுள்ள கட்சியிலிருந்து மாறி வேறு கட்சியில் சேர்வதற்கும், அதனால் லாபத்தையும் எதிர்பார்க்கலாம்.
மாணவமணிகள் : வித்யாஸ்தானம் மற்றும் வித்யாகாரகர் தோஷமற்ற நிலைகளில் சஞ்சரிப்பதால் மாணவமணிகளுக்குச் சிறந்த முன்னேற்றம் ஏற்படும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டில். படிப்பில் கவனமும், உற்சாகமும் அதிகரிக்கும். கிரகிப்புத்திறன், ஞாபகத்திறன் ஆகியவை பலமடங்கு அதிகமாகும். வெளிநாட்டில் விசேஷ கல்வி பெறும் மாணவமணிகளுக்குக் கிரகநிலைகள் சுபமாகச் சஞ்சரிக்கின்றன. உங்கள் ப்ராஜெக்டுகளை எளிதில் முடித்து விடுவீர்கள். வெளிநாடு சென்று உயர்கல்வி பெறவேண்டும் என்ற விருப்பமுள்ளவர்களுக்குத் தேவையான விசா, ஸ்காலர்ஷிப் ஆகியவை கிடைக்கும்.
விவசாயத்துறையினர் : உங்களுக்கு மட்டும் கிரகங்கள் குறை வைப்பார்களா? எதிர்பார்த்ததைவிட விளைச்சல் அதிகமாகவே இருக்கும் இந்த ஆண்டு. தண்ணீர் பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை. அரசாங்கத்தின் ஆதரவையும் எதிர்பார்க்கலாம். கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியைப் பெறும்.
பெண்மணிகள் : மனநிம்மதியை உங்களுக்கு முழுமையாக இந்த ஆண்டு அளிக்கும்படி கிரகநிலைகள் உதவிகரமாகச் சஞ்சரிக்கின்றன. குடும்ப நிர்வாகத்தில் சிரமங்கள் இராது. வருமானம் நல்லபடியே இருப்பதால் மனதில் உற்சாகம் பெருகும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கும் கிரகநிலைகள் சாதகமாகவே இருக்கின்றன. அலுவலகச் சூழ்நிலை திருப்தியைத் தரும். சக ஊழியர்களின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.
பொருளாதாரம் : மனதில் கவலை அளித்துவந்த நிலை நீங்கி, பொருளாதார நிலை சீர்படும். வருமானம் அதிகரிப்பதால் பழைய கடன்களைச் சிறிது சிறிதாக அடைத்து இந்த ஆண்டில் மனநிம்மதியைப் பெறமுடியும்.
ஆரோக்கியம் : ராகுவின் நிலையினால் அவ்வப்போது சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு உடனுக்குடன் குணமாகும். கூடியவரையில் அதிக அலைச்சலைத் தவிர்க்கவும். கட்டுப்பாடான உணவு, நேரப்படி ஓய்வு, உறங்குதல் ஆகியவை ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள உதவும். ராகு சஞ்சரிக்கும் தனுசு, குருபகவானின் சொந்த ராசியாக இருப்பதால், ராகுவினால் ஏற்படும் தோஷம் பெருமளவில் குறைகிறது.
அறிவுரை : பொருளாதார நிலை இந்த ஆண்டில் சீர்படுவதால், அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு பழைய கடன்களை அடைத்துவிடுவது நல்லது. ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ராகு விரயத்தில் சஞ்சரிப்பதால் திடீர் திடீரென்று ஆரோக்கியக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே கூடியவரையில் அதிக அலைச்சலைக் குறைத்துக்கொள்ளவும். ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் தேவை.
பரிகாரம் : 1) தினமும் ஸ்ரீ நரசிம்மரின் திருவுள்ளத்திற்கு மிகவும் பிடித்த மந்திர ராஜபத ஸ்தோத்திரம் சொல்லி வாருங்கள்.
2) தினமும் ஒரு சர்க்கமாவது ஸ்ரீமத் சுந்தரகாண்டம் படித்து வரவும். சுந்தரகாண்டம் பாராயணம் என்பது ‘சர்வதோஜ நிவாரணி’ என அனைத்து தோஜ பரிகாரமாக விளங்கும் மகா மந்திரமாகும்.
3) குடும்பத்துடன் ஸ்ரீரங்கம், திருநாராயணபுரம், ஸ்ரீபெரும்பூதூர், ஆழ்வார் திருநகரி ஆகிய திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள மகாபுருஜர் ஸ்ரீமத் ராமானுஜரைத் தரிசித்துவிட்டு வந்தால் போதும்.
இவை அனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்த,உடனடியாகப் பலனளிக்கக்கூடிய பலன்களாகும்.
 (அவிட்டம் 3ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
குடும்பம் : குரு, ராகு, கேது ஆகிய கிரக சஞ்சார நிலைகள் அனுகூலமாக உள்ளன. சனிபகவான் மட்டும் அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும் அவர் கும்ப ராசிக்கு அதிபதியாக இருப்பதால் அதிகச் சிரமங்களைக் கொடுக்கமாட்டார். சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு எளிதில் நிலைமை சரியாகும். தேவையற்ற அலைச்சல், பணவிரயம் ஆகியவை ஏற்பட்டாலும் பிரச்சினைகள் அளவோடுதான் இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள், நீதிமன்ற வழக்குகள் ஆகியவை நீடிக்கும். தீர்த்த, தலயாத்திரை, அருளாளர்கள் ஆசி, கங்கா ஸ்நானம் ஆகியவை கிட்டும். திருமண முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டு, பின்பு வரன் அமையும். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள். சிலர் குடும்பத்தைவிட்டு தாற்காலிகமாகப் பிரிந்திருக்க நேரிடும்.
உத்தியோகம் : பொறுப்புகள் கூடுதலாகும். அலைச்சல் அதிகமாகும். ஒரு மேலதிகாரியினால் அன்றாடப் பணிகளில் சிறு பிரச்சினைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு இடமாற்றமும் உண்டு. வேலையில்லாத கும்ப ராசியினருக்குச் சிறு முயற்சியினாலேயே நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை பார்த்துவரும் கும்ப ராசியினருக்கு இடமாற்றம், நிறுவன மாற்றம் உண்டு. உங்கள் பொறுப்புகளிலும், கடமைகளிலும் சற்று கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம் எனக் கிரகநிலைகள் சுட்டிக்காட்டுகின்றன.
தொழில், வியாபாரம் : நியாயமற்ற போட்டிகள் அதிகரிக்கும். லாபம் திருப்திகரமாக இருக்கும். தொழிலும், வியாபாரமும் படிப்படியாக அபிவிருத்தி அடையும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். அலைச்சலும், உடற்சோர்வும் அதிகமாக இருப்பினும் அவற்றால் நன்மை உண்டு. கூட்டாளிகளுடன் வாக்குவாதமும், சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், இறுதியில் சமரசத்தில் முடியும். அபிவிருத்தித் திட்டங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. ஏற்றுமதித்துறையினருக்கு வெளிநாட்டு ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவிற்குக் கிடைக்கும். இறக்குமதித் துறையினருக்கு நன்மையான ஆண்டு இது. ஒரு சிலர் வெளிநாடு சென்றுவரும் சாத்தியக்கூறு உள்ளது.
கலைத்துறையினர் : வருமானம் குறையாது. புதிய வாய்ப்புகள் தாமதமானாலும் கிடைப்பது உறுதி. தயாரிப்பாளர்கள் அளவோடு முதலீடு செய்து புதிய தயாரிப்புகளில் இறங்கலாம். கூடியவரையில் தேவைக்கு அதிகமாக கடன் வாங்கவேண்டாம். ஆபத்தான காட்சிகளில் நடிக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் நடிப்பது அவசியம். ஏனெனில் சிறு விபத்துகள் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறு உள்ளது.
அரசியல்துறையினர் : மேலிடத் தலைவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். செயலிலும், பேச்சிலும் எச்சரிக்கை அவசியம். தசா, புக்திகள் பாதகமாக இருப்பின் சிலருக்கு வீண் பழி ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறு உள்ளதால், பிரபலமானவர்களுடன் அளவோடு பழகுவது மிகவும் அவசியம். எதிலும் சற்று நிதானத்துடனும், சாதுர்யமாகவும் நடந்துகொள்வது உங்கள் எதிர்கால நன்மைக்கு அவசியம் எனக் கிரக சஞ்சார நிலைகள் அறிவுறுத்துகின்றன.
மாணவமணிகள் : பாடங்களில் கவனம் செலுத்துவதற்கு நீங்கள் மிகவும் பாடுபட வேண்டியிருக்கும். உடல் அசதியும், கவனக்குறைவும் வேதனை அளிக்கும். இருப்பினும் படிப்பில் சிரத்தை குறையாது. விடுதிகளில் தங்கி படித்துவரும் மாணவமணிகளுக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். வெளிநாடுகளில் கல்வி பயின்றுவரும் மாணவமணிகளுக்கு ப்ராஜெக்டுகளை முடிப்பதில் தாமதமும், தடங்கலும் ஏற்படக்கூடும். கீழே கூறியுள்ள பரிகாரங்கள் இத்தகைய தடங்கல்களையும், தாமதத்தையும் போக்கும் சக்தி கொண்டவை. ஆதலால் அந்தப் பரிகாரங்களைக் கடைப்பிடித்து நன்மை பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.
விவசாயத்துறையினர் : விளைச்சல் நல்லபடியே உள்ளது. விவசாயத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறைவின்றிக் கிடைக்கும். கால்நடைகள் நோய்வாய்படுவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சமாளிப்பதில் சிரமம் இராது.
பெண்மணிகள் : இந்த ஆண்டு பல எதிர்பாராத செலவுகளை நீங்கள் சமாளிக்க நேரிடும். சிலர் குழந்தைகளின் நலன் கருதியோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ தாற்காலிகமாக கணவரிடமிருந்து பிரிந்திருக்க நேரிடும். முக்கியமாக, வெளிநாடுகளில் வேலை பார்த்துவரும் பெண்மணிகள் மற்றும் கணவர் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவராக இருப்பின் இத்தகைய குறுகியகால பிரிவு நிகழக்கூடும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகள் அலுவலகத்தில் தாங்கள் உண்டு, தங்கள் பணிகள் உண்டு என இருப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். சிலருக்கு இலாகா மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. எதிலும் பொறுமை, நிதானம் அவசியம்.
பொருளாதாரம் : வருமானம் நல்லபடியே நீடிக்கிறது. எதிர்பாராத செலவுகளால் அவ்வப்போது பணப் பிரச்சினை சிறு அளவில் ஏற்படக்கூடும். கூடியவரையில் திட்டமிட்டுச் செலவு செய்தால் மிகவும் நல்லது.
ஆரோக்கியம் : சாதாரணமாக ஏற்படக்கூடிய சிறு உடல்உபாதைகள், ஜுரம், அஜீரணம், உடற்சோர்வு ஆகியவை ஏற்படக்கூடும். மற்றபடி கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டில் கவலைப்படும் அளவிற்கு எவ்வித ஆரோக்கியக் குறைவும் ஏற்படுவதற்குக் கிரக சஞ்சார நிலைகளின்படி வாய்ப்பில்லை.
அறிவுரை : ஏற்கெனவே நாங்கள் கூறியுள்ளபடி பணவசதி இருக்கும்போது சிக்கனமாகச் செலவு செய்யவும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. மாணவமணிகள் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
பரிகாரம் :
1) மாணவமணிகள் தினமும் பெற்றோர்களையும், பெரியோர்களையும் வணங்கி வருவதுடன், ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் மற்றும் ஸ்ரீ சரஸ்வதி தியான ஸ்லோகம் ஆகியவற்றைச் சொல்லி வருதல் அவசியம். இவை தவிர புதன்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயிலுக்குத் தவறாது சென்று தரிசித்துவிட்டு வரவும். வசதியிருப்பின் புதன்கிழமைகளில் மட்டும் ஆலய கருவறையில் பிரகாசிக்கும் தீபத்தில் சிறிது நெய் சேர்த்து வரவும்.
2) கங்கை, யமுனை, தாமிரபரணி, துங்கபத்திரா போன்ற புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வது மிகச் சிறந்த கிரகதோஜ பரிகாரமாகும்.
3) தினமும் பித்ருக்களை மானசீகமாகப் பூஜித்து வரவும். அவர்களது ஆசிக்கு அளவற்ற சக்தி உண்டு.
 (பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)
குடும்பம் : குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். கணவர்மனைவியிடையே பரஸ்பர ஒற்றுமையும், அன்னியோன்யமும் நிலவும். திருமண சம்பந்தமான முயற்சிகளில் சற்று தாமதமும், தடங்கலும், பண விரயமும் ஏற்பட்டாலும் இறுதியில் நல்லபடி முடியும். நெருங்கிய பந்துக்களினால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு கவலையளித்தாலும் உங்கள் நிலையை அவை பாதிக்காது. நீதிமன்ற வழக்குகள், சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாகத் தீரும். தாயின் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய ஆண்டு இது. ஒரு சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்க சாத்தியக்கூறு உள்ளது. குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோகம் : கிரகநிலைகள் அனுகூலமாக அமைந்துள்ளன. உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடிய ஆண்டு இது. நிறுவனத்தினர், மேலதிகாரிகள் உங்கள் உழைப்பை பாராட்டுவார்கள். சிலருக்குச் சிறு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்குச் சிறந்த வாய்ப்புகள் உள்ளன. வேலையில்லாமல் கஷ்டப்படும் மீன ராசியினருக்கு வேலை கிடைக்கும். அலைச்சலும், உழைப்பும் சற்று கடினமாகவே இருக்கும். இருப்பினும், அவற்றால் லாபமும், முன்னேற்றமும் உண்டு.
தொழில், வியாபாரம் : நல்ல முன்னேற்றத்தை உங்களுக்கு அளிக்கக்கூடிய புத்தாண்டு இது. ஏற்றுமதி, இறக்குமதித் துறையினருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய வருடம் இது. லாபம் குறையாது. இருப்பினும், பலவழிகளிலும் பணம் விரயமாவதாலும், தொழிலாளர்கள் பிரச்சினையினாலும், அவ்வப்போது பணப் பற்றாக்குறையும், நிதிநிறுவனங்களினால் பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். எத்தருணத்திலும் நிலைமையைச் சமாளித்துவிடக்கூடிய அளவிற்கு உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களினால் தொழில் முன்னேற்றமடையும். தொழில், வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு சென்றுவரும் சாத்தியக்கூறும் உள்ளது.
கலைத்துறையினர் : வாய்ப்புகளுக்குக் குறைவிராது. வருமானம் நல்லபடியே உள்ளது. இருப்பினும் பலவழிகளிலும் பண விரயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், கைப்பணத்தை எண்ணிச் செலவழியுங்கள். தயாரிப்பாளர்கள் தேவையில்லாமல் கடன் வாங்கிப் பெரிய அளவில் படங்களை எடுக்கவேண்டாம். தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறைகளில் புதிதாக ஈடுபட ஆர்வமுள்ள அன்பர்கள் அதற்கான முயற்சிகளில் இறங்கலாம்.
அரசியல்துறையினர் : கட்சியில் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்குக் கட்சியில் புதிய பொறுப்புகளை ஏற்பதற்குச் சாத்தியக்கூறு உள்ளதைக் கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பண விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள். ஏனெனில், வீண் அபவாதங்கள் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறு உள்ளது.
மாணவமணிகள் : படிப்பில் இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கிரகிப்புத்திறன், ஞாபகத்திறன் கூடும். சகவாச தோஷம் விலகும். வெளிநாடுகளில் கல்வி பயின்றுவரும் மாணவமணிகளுக்கு உற்சாகமான காலகட்டம் இது. உங்கள் ப்ராஜெக்ட்டுகளை அதிகச் சிரமமின்றி முடிப்பதற்குக் கிரகநிலைகள் அனுகூலமாக உள்ளன. வெளிநாடு சென்று உயர்கல்வி படிப்பதற்கு விருப்பமிருப்பின், அத்தகைய மாணவமணிகளுக்கு விசா எளிதில் கிடைக்கும்.
விவசாயத்துறையினர் : எதிர்பார்த்த அளவிற்கு விளைச்சல் திருப்திகரமாக இருக்கும். வருமானத்திற்கும் குறைவிராது. கால்நடைகளினால் அதிகச் செலவுகள் ஏற்படும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். நிதிநிறுவனங்கள் உதவும். தண்ணீர் பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை.
பெண்மணிகள் : குடும்ப நிர்வாகத்தில் பிரச்சினை என்று எதுவும் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறு கிடையாது. வருமானம் போதிய அளவிற்கு இருப்பினும், சுபச்செலவுகள் அதிகமாக இருப்பதால் அவ்வப்போது பணப்பற்றாக்குறை ஏற்படக்கூடும். கணவரின் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்பட்டு, பின்பு சரியாகும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் காத்துள்ளது. ஆனால் உழைப்பும், பொறுப்புகளும் கூடும். அடிக்கடி உடலில் அசதி உண்டாகும்.
பொருளாதாரம் : இந்த ஒரு விஷயத்தில் மீன ராசி அன்பர்கள் இந்தப் புத்தாண்டில் சற்று கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டியது அவசியம். சுபச்செலவுகளும், திடீர்ச் செலவுகளும் நெருக்கடியை உண்டுபண்ணக்கூடும். கூடியவரையில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. பழைய கடன்கள் அவ்வப்போது தொல்லை தரக்கூடும்.
ஆரோக்கியம் : சிறுசிறு பின்னடைவுகள் ஏற்பட்டு எளிய சிகிச்சையினால் சரியாகும். மற்றபடி பெரிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட வாய்ப்பில்லை.
அறிவுரை : சிக்கனத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். திட்டமிட்டுச் செலவு செய்தல் அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் உடல்நலனில் சற்று அதிகமாகவே கவனிப்பு தேவை.
பரிகாரம் : 1) தினமும் காலையில் ஒரு சர்க்கம் ஸ்ரீமத் சுந்தரகாண்டமும், மாலையில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமமும் படித்து வாருங்கள்.
2) ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீ அபிராமி அந்தாதி, ஸ்ரீ ஸ்துதி, ஸ்ரீ மீனாட்சி பஞ்சரத்தினம் ஆகியவற்றில் எவை முடிகிறதோ அவற்றைத் தினமும் தவறாமல் படித்து வரவும். இது மிகவும் அவசியம்.
3) திருக்கொள்ளிக்காடு தரிசனம்.
விசேஷக் குறிப்பு :
ஜோதிடக்கலையின் விதிகளின் அடிப்படையில் சென்ற விரோதி ஆண்டை விட இந்த விக்ருதி தமிழ்ப் புத்தாண்டு மக்களுக்கு அதிக நன்மையை அளிக்கும்படி கிரகநிலைகள் அமைந்துள்ளன. ஆதலால் மக்கள் அனைவரும் கவலைப்படாமல் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம். இங்கு கூறப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் பிருஹத் ஜாதகம், பாவர்த்த ரத்னாகரம், சர்வார்த்த சிந்தாமணி, சாராவளி, உத்தர காலாம்ருதம் ஆகிய புராதன ஜோதிட கிரந்தங்களிலிருந்து கணித்துக் கூறப்பட்டுள்ளன. |