நடிகர் பிரகாஷ்ராஜ்க்கும் டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவுக்கும் இன்று மும்பையில் திருமணம் சிறப்பாக நடந்தது. போனிவர்மா பஞ்சாபி. பிரகாஷ்ராஜ் கன்னடர். பாலசந்தரால் தமிழுக்கு அறிமுகமான பிரகாஷ்ராஜ் நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரி லலிதகுமாரியை காதலித்து மணம் செய்துகொண்டார். இவர்
களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஒரு மகன் இறந்துவிட்டான்.
பிரகாஷ்ராஜ் சொந்தப்படம் எடுக்கத்தொடங்கிய போது மும்பையில் இருந்த போனிவர்மாவை தனது படத்துக்கு டான்ஸ் மாஸ்டராக ஒப்பந்தம் செய்தார். இருவருக்குமிடையே காதல் அரும்பியது. போனிவர்மா திருமணமாகி மணவிலக்கு பெற்றிருந்தவர் என்பதால் பெண் சைடில் பிரச்னை எதுவுமில்லை. ஆனால் பிரகாஷ்ராஜ் லலிதகுமாரியை விவாகரத்து செய்தபின்னரே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பதால் இருவரும் பரஸ்பர மணவிலக்கு பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மணவிலக்கை தவிர்ப்பதற்கு லலிதகுமாரி கடுமையாக முயன்றும் முடியாமல் போய்விட்டது. எனவே மணவிலக்குக்கு சம்மதம் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் மணவிலக்கு கிடைத்து விட்டதால் பிரகாஷ்ராஜ் தனது திருமணத்தை மும்பையில் நடத்துவதற்கு முடிவு செய்தார். இன்று (ஆகஸ்டு 24) காலை 10.30 மணிக்கு பஞ்சாபிய முறையில் திருமண நிகழ்ச்சிகள் தொடங்கின. பிரகாஷ்ராஜ் தலைப்பாகை, ஷெர்வாணி அணிந்திருந்தார். ஏறத்தாழ ஒருமணிநேரம் நிகழ்ச்சிகள் நடந்தன. திருமணம் பதிவு செய்யப்பட்டது. சென்னையிலிருந்து திரையுலகைச் சேர்ந்த யாரும் அழைக்கப்படவில்லை. சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருப்பதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.